இந்த வாரம் கலாரசிகன்



எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும் புதுமைப் பித்தனும், தி.ஜானதிராமனும், ஜெயகாந்தனும் பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?மேலே சொன்ன வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு பெயர் கு.சின்னப்ப பாரதி. வேடிக்கை என்னவென்றால், உலக அரங்கில் அறியப்படும் இந்தத் தமிழ் எழுத்தாளர் இன்றுவரை வியாபார சஞ்சிகைகளின் நிழலில் கூட ஒதுங்கியது இல்லை என்பதுதான். வாசகர்களைத் திருப்திபடுத்தவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தை ஒரு தவமாகவும், சமுதாயக் கடமையாகவும் கொண்ட எழுத்தாளர்களின் பட்டியலில் முன்நிலை வகிப்பது யார் என்று கேட்டால், விவரமறிந்தவர்கள் கு.சி.பா. என்றுதான் கூறுவார்கள்.கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள் அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள். இவரது "தாகம்', "சங்கம்', "சர்க்கரை' "பவளாயி' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உலக இலக்கிய அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றன. இவரது "சங்கம்' என்கிற நாவல் ஆங்கிலம் தவிர ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய விமர்சகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் குவித்திருக்கிறது.""என்னைப் பொருத்த மட்டில் எழுத்து என்பதை பணம் சேர்க்கும், புகழ் ஈட்டும் சாதனமாக நான் கருதவில்லை. சாதாரண மக்களைப் பாதிக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராகவும் கெüரவமான ஒரு வாழ்வை உருவாக்கவும் போராடும் மக்கள் திரளுக்கு உதவக் கூடியதாக இருக்கும் வகையில் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன்'' என்று கூறும் கு.சி.பா.வின் நாவல்கள் ஏனோ தானோ என்று எழுதப்படுவன அல்ல என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு.ஒரு நாவலை எழுத அவர் மூன்று முதல் எட்டு ஆண்டுகள்கூட எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரது "சுரங்கம்' நாவலைப் படித்துவிட்டு ஒரு சில மணித் துளிகள் பிரமை பிடித்ததுபோல அமர்ந்துவிட்டிருந்தேன். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்தான் "சுரங்கம்'.சுரங்கத் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்த்தையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் "சுரங்கம்' நாவலின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா? நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து உலகில் எழுதப்பட்ட ஒரே ஒரு வர்க்கப் போராட்ட நாவல் சுரங்கமாகத்தான் இருக்கும்."இன்று சித்தாந்த உள்ளடக்கம் கொண்ட படைப்புகள் அருகிப் போய்விட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் அப்படிப்பட்ட படைப்புகளே இந்திய அளவில் மேலோங்கியிருந்தன' என்கிற கு.சி.பா.வின் கருத்தை முற்றுமாக வழிமொழிபவன் நான். சமுதாயச் சிந்தனை என்பது முற்றிலுமாக அழிந்து, சுய சிந்தனையும், தனிமனித மன உணர்வுகளும் மட்டுமே எழுத்துகளில் பிரதிபலிக்கும் துர்ப்பாக்கியம் மனதைப் பிசைகிறது.உலகமே போற்றிப் பாராட்டும் ஒரு படைப்பாளி நமக்கு மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூட விரும்பாமல் இருக்கிறாரே என்பதில் எனக்குள்ள ஆதங்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. கு.சி.பா.விடம் கேட்டால், அவர், ""என்னைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எனது எழுத்துகள் அல்லவா மக்களைப் போய்ச் சேர வேண்டும்?'' என்று எதிர்க் கேள்வி எழுப்புவார்.இதுவரை நீங்கள் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள் எதுவும் படிக்காமல் இருந்திருந்தால், தயவுசெய்து உடனே பாரதி புத்தகாலயத்துக்கு ஓடுங்கள். இல்லையென்றால் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பு முழுமையானதாகாது.எனக்கு இன்னொரு ஆதங்கம். உலகம் போற்றும் இந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புக்கு "ஞானபீடம்' விருது தரப்பட வேண்டாமோ? குறைந்த பட்சம் சாகித்திய அகாதெமி விருது கூடத் தரப்படவில்லையே, ஏன்? விருதுகளின் மீதான மரியாதை இதனால்தான் குறைகிறது!*******துறுதுறுப்பான இளைஞர் தி.பாலாஜி "சிகரம்' அமைப்பின் தூண்களில் ஒருவர். "தமிழன் வாழ்ந்தால் தட்டிக் கொடு; தமிழன் வீழ்ந்தால் முட்டுக் கொடு!' என்பதை முத்திரை வாக்கியமாகக் கொண்டு செயல்படும் இந்த இளைஞர், புதிய தலைமுறை மாணவர் பட்டாளத்தின் பிரதிநிதி.மாணவர்கள் சிலர் ஒரு தீபாவளித் திருநாளின்போது ஒன்றுகூடிப் பேசினார்கள். பேச்சு விவாதமானது. அப்போதுதான் தெரிந்தது, அவர்களுக்குள் அக்கினிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருந்த சமுதாய தாகம் அவ்வப்போது கவிதையாகப் பொங்கி எழுந்தது என்பதை. தங்களது நோட்டுப் புத்தகத்தில் இருந்த எண்ணச் சிதறல்களைத் தொகுத்து ஒரு கவிதைத் தொகுப்பாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியதாம். விளைவு? "அநீதி அகதி அமைதி' என்கிற கவிதைத் தொகுப்பு.சேலம் மகாராஜா பொறியியற் கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிக்கும் கு.பிரபாகரன் எழுதிய "பிஞ்சுக்கு நீதி' என்கிற தலைப்பிலான கவிதை ஒன்று அந்தத் தொகுப்பில் காணப்படுகிறது. அதிலிருந்து சில வரிகள், தாய் தந்தை அற்றவன் - மட்டும் அல்ல - தன் நாட்டில் வாழ கதியற்று - கலங்கி நிற்பவனும் அநாதை தான்! கேள்விப்பட்டேன்! அங்கேயும் மக்கள் ஓடி விளையாடுகிறார்கள் ஆனால் துரத்துவது துப்பாக்கி தோட்டாக்கள் என்று! கள்ளத் தோணியில் ஏறி கடிகார முள்ளை விட வேகமாக நாடு கடந்து அமைதியற்ற அகதியாகத் தமிழன் வருவதென்ன நீதி!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue