பிடித்தது: உலகைக் குலுக்கிய புத்தகம்!



வாழ்க்கை மிகக் கடினமானது'' இந்த ஆழமான உண்மையோடுதான் ஆரம்பிக்கிறது அந்தப் புத்தகம். புத்தகத்தின் பெயர் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' (The Road Less Traveled). இந்தப் புத்தகத்தின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளைக் கடந்துவிட்டது என்கிறார்கள். சரி, அப்படி என்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்?
திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவலா இது? இல்லை. பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடும் மூன்றாம்தரப் புத்தகமா? இல்லை. மதவெறிக்கான திரியைத் தூண்டிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதா? அதுவும் இல்லை.
"தி ரோட் லெஸ் ட்ராவல்டு' ஓர் உளவியல் புத்தகம். இன்றையத் தமிழ்ப் பதிப்பாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "சுயமுன்னேற்ற நூல்'.
1978 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான இந்த நூல் நாற்பதாண்டுகள் கடந்த பின்னும் விற்பனையில் இன்னும் சக்கைபோடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் மார்கன் ஸ்காட் பெக் (Morgan Scott Peck).
நியூயார்க்கில் 1936, மே 22-ம் தேதி பிறந்தார் பெக். அவருடைய பதின்மூன்றாவது வயதில், நியூ ஹாம்ப்ஷைரில் இருக்கும் மிகப் பிரபலமான ஒரு பள்ளியில் பெக்கைச் சேர்த்துவிட்டார்கள் பெற்றோர். பெக்குக்கு என்ன காரணமோ பள்ளி வாழ்க்கை ருசிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு சிறையைப் போலத் தோன்றியிருக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர் திரும்ப ""பள்ளிக்குப் போக மாட்டேன்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார். பதறிப் போனார்கள் பெற்றோர். அடிப்படைக் கல்விகூட இல்லாமல் அமெரிக்காவில் எப்படிக் குப்பை கொட்டுவது? மிரட்டினார்கள், உருட்டினார்கள், அடித்துக் கூடப் பார்த்துவிட்டார்கள்.
பெக், ""என்னை வெட்டிப் போட்டாலும்
பள்ளிக்கூடப் படியை மிதிக்க மாட்டேன்'' என்று சொல்லிவிட்டார்.
"என்ன செய்வது? இவனை இப்படியே விடமுடியாதே' என்று யோசித்த பெக்கின் தந்தை அவரை ஒரு மனநல மருத்துவரிடம் கொண்டு போய்விட்டார். கிட்டத்தட்ட ஒருமாதம் அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருக்கிறார் பெக். அங்கிருந்த அனுபவம்தான் அவரை பின்னாட்களில் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' நூலை எழுதத் தூண்டியிருக்கிறது.
பி.ஏ.பட்டம் பெற்ற பிறகு மார்கன் ஸ்காட் பெக் எம்.டி. படித்தார். ஒரு மனநல மருத்துவராக வாழ்க்கையைத் தொடர்ந்தார். அமெரிக்க அரசின் பல நிறுவனங்களில் மனோதத்துவ நிபுணராக வேலை பார்த்தார்.
"தி ரோட் லெஸ் ட்ராவல்டு' அவருடைய முதல் புத்தகம்.

தனிமனிதராகவும் ஓர் உளவியல் நிபுணராகவும் அவருக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களின் அடிப்படையில் அந்தப் புத்தகத்தை வடிவமைத்திருந்தார் பெக்.
இந்தப் புத்தகத்தை எழுதியபோது பெக் அவ்வளவு பிரபலமானவரில்லை. புகழ்பெற்ற பதிப்பகமான ரேன்டம் ஹவுஸில் (Random House) போய் தன் புத்தகத்தை வெளியிடும்படி கேட்டார் பெக். ""நீங்க ஒண்ணும் அவ்வளவு பிரபலமான ஆள் இல்லையே! புத்தகம் எப்படி விக்கும்?'' என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதோடு அவர்கள் சொன்ன இன்னொரு காரணம், "புத்தகத்தின் இறுதிப் பகுதியில் மிக அதிகமாக கிறிஸ்தவம் சம்பந்தமான விஷயங்கள் வருகின்றன' என்பது.

அதற்குப் பிறகு சைமண்ட் அன்ட் ஸ்சஸ்டர் (Simon&Schuster) என்ற பதிப்பக நிறுவனம் மார்கன் ஸ்காட் பெக்கின் புத்தகத்தை வெளியிட முன்வந்தது. முதலில் 5000 பிரதிகள்தான் அடித்தார்கள். அதற்காக அந்த நிறுவனம் பெக்குக்குக் கொடுத்த தொகை வெறும் 7,500 டாலர்கள். அதற்குப் பிறகும் புத்தகம் அதிகமாகப் பிரபலமாகவில்லை.
மார்கன் ஸ்காட் பெக் தான் போகிற இடங்களுக்கெல்லாம் புத்தகத்தை எடுத்துப் போவார். அவர் பேசுகிற கூட்டங்களில் எல்லாம் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார். பல முயற்சிகள் செய்து பத்திரிகைகளில் அந்தப் புத்தகத்திற்கான விமர்சனங்களை வரவழைத்தார்.
1980-ல் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' மறுபதிப்புச் செய்யப்பட்டது. ஆனாலும் அதிகம் கண்டு கொள்ளப்படவில்லை. முதல் பதிப்பு வெளியான ஐந்து ஆண்டுகள் கழித்து 1983-ம் ஆண்டுதான் அதன் விற்பனை "கிடுகிடு'வென உயர்ந்து "பெஸ்ட் செல்லர்ஸ்' லிஸ்டில் சேர்ந்தது.

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகிறார் மார்கன் ஸ்காட் பெக். உணர்வுபூர்வமான, ஆன்மிகமான, மனரீதியான உடலின் ஆரோக்கியத்துக்கு ஒழுக்கம் மிக அவசியம் என்கிறார். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிற ஒருவர் எப்போதும் மகிழ்வோடு இருப்பார்; பொறுப்புணர்வுள்ள ஆளாக இருப்பார்; உண்மைக்கு விசுவாசமாக இருப்பார். எனவே அவருடைய வாழ்க்கை மிக உன்னதமாக இருக்கும் என்கிறார் பெக்.
இரண்டாவது பகுதியில் நேசித்தலின் இயல்பை விவரிக்கிறார் பெக். காதலைப் பற்றியும் நேசத்தைப் பற்றியும் ஏற்கனவே இருக்கும் தவறான பிம்பங்களை உடைத்துச் சுக்குநூறாக்கியிருக்கிறார். "உண்மையான காதல்' என்பது காதலில் விழுவதல்ல. அந்த மாதிரியான காதல் ஒருவகை உணர்வு. உண்மையான காதல் என்பது ஒருவரின் ஈகோ எல்லையைத் தாண்டிப்போய் மற்றவரின் எல்லைக்குள் நுழைந்து, அவரோடு ஒத்துப் போவது. இப்படியெல்லாம் காதலுக்குப் பது விளக்கம் கொடுக்கிறார் பெக்.
"தி ரோட் லெஸ் ட்ராவல்டு' புத்தகத்தின் இறுதிப் பகுதி "கருணை' உணர்வைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. கருணைக்கு இரக்க உணர்வுக்கும் இருக்கிற சக்தி மனிதநேயத்தையும் ஆன்மிகத்தையும் வளர்க்கிறது என்பது பெக்கின் கருத்து.
இந்த ஆழமான கருத்துகளை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பதுதான் மார்கன் ஸ்காட் பெக்கின் வெற்றி. புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாது. அத்தனை விறுவிறுப்பு. அவர் தன்னுடைய மனோதத்துவ சிகிச்சைகளின்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் "தி ரோட் லெஸ் ட்ராவல்ட்' புத்தகத்தை எழுதினார். ஆனாலும் மதரீதியான பார்வை புத்தகத்தில் மிக அதிகமாக இருக்கிறது என்பது பலருடைய விமர்சனமாக இருக்கிறது.
1959 - இல் பெக், லில்லி ஹோ என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 1994 ஆம் ஆண்டு இருவருக்கும் அவர்களுடைய சேவைகளுக்காக "கம்யூனிட்டி ஆஃப் கிறிஸ்ட் இன்டர்நேஷனல் அமைதி விருது' (Community of Christ International Peace Award) கிடைத்தது. 2004 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தார்கள், விவாகரத்துப் பெற்றார்கள். அதற்குப் பிறகு பெக், கேத்தலின் க்லைன் யேட்ஸ் (Kathleen Kline Yates) என்பவரை மணந்துகொண்டார். ஒழுக்கம், அமைதி, மகிழ்ச்சி இவற்றுக்கெல்லாம் காரணங்களை "தி ரோட் லெஸ் ட்ராவல்ஸ்' ஆராய்ந்தாலும், எத்தனையோ லட்சம் வாசகர்களுக்கு வழிகாட்டியிருந்தாலும் பெக்கின் பெர்சனல் வாழ்க்கை அமைதியில்லாமல், கொந்தளிப்போடு கழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
2005-ம் ஆண்டு, செப்டெம்பர் 25-ம் தேதி, கன்னெக்டிக்டிட்டில் இருக்கும் தன் வீட்டில் பெக் இறந்து போனார். இறந்தபோது அவருக்குப் பல வியாதிகள். அவற்றில் முக்கியமானவை குடலில் புற்றுநோய், பார்க்கின்ஸன்ஸ் என்கிற கொடிய நோய்.
பெக்கின் இன்னொரு முக்கியமான நூல் "பியூப்பிள் ஆஃப் தி லை' (People of the Lie).ஆனால் அவருடைய எந்தப் புத்தகமும் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' அளவுக்குப் பேசப்படவில்லை.
ஓர் எழுத்தாளரின் முதல் புத்தகமே கோடிக்கணக்கில் விற்பனையாவதென்பது அமெரிக்காவில் மட்டுமே நடக்கிற அதிசயம். உளவியல்ரீதியில் மனித மனங்களை அசைபோடும் "தி ரோட் லெஸ் ட்ராவல்டு' அதற்குத் தகுதியான ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம்.
கருத்துக்கள்

Kindly let me know the price of the book and the availability all over tamil nadu especially in Salem

By R.Madhavan
8/9/2009 11:42:00 PM

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue