Posts

Showing posts from December, 2014

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      28 திசம்பர் 2014       கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      28 திசம்பர் 2014       கருத்திற்காக.. தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும் பெருமையும் வாய்ப்பும் அளப்பரியது என்றாலும் அவருடைய மாணவர்களில் ஒருவன் என்னும் சிறப்பு அதனைவிடப் பெரியது எனலாம். 1966-ஆம் ஆண்டு சூன் திங்களில் என்னுடைய பட்டப்படிப்பை நிறைவுசெய்துவிட்டு அவர் தொடங்கிய “குறள்நெறி’’ நாளிதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியேற்று அவருடைய

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      28 திசம்பர் 2014       கருத்திற்காக.. எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானி யிடம் தட்டேந்தி நிற்கிறாள் என் தாய். இசை மன்றங்களின் குளிரூட்டிய கூடங்களில் துக்கடாவாக மட்டுமே தூக்கி எறியப்படுவதைச் சகித்துக் கொண்டு நூலோரின் சங்கீத சபைக்குள் நுழையமுடியுமா –என்று தெலுங்கு தியாகையரிடம் தேம்பி நிற்கிறாள் என் தாய். டெல்லி வழி இந்தி பள்ளி வழி ஆங்கிலம் இறைவன் வழி சமசுகிருதம் இசையின் வழி தெலுங்கு மொழி என்ற நான்கு சங்கிலிகள் கைகள் இரண்டிலு