Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி

arusolcurai_attai+arangarasan
02.பொருள்பால்
05.அரசு இயல்
அதிகாரம் 040.   கல்வி

கல்வி கற்கும் முறைகள்,
கல்வி அறிவின் பயன்கள்.

  1. கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின்,
      நிற்க, அதற்குத் தக.

          படிப்பதைத் தெளிவாகப் படிக்க;
        படித்தபின் படித்தபடி நடக்க.

  1. எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,
     கண்என்ப, வாழும் உயிர்க்கு.

     அறிவியலும், இலக்கியமும், வாழும்
        உயிருக்கு, இரண்டு கண்கள்.

  1. கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு
     புண்உடையர், கல்லா தவர்.

     கற்றார்க்கே, முகத்தில் இருகண்கள்;
        கல்லார்க்கோ, முகத்தில் இருபுண்கள்.

  1. உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்,
     அனைத்தே, புலவர் தொழில்.

      மகிழக்கூடி, அறிவைப் பகிர்ந்து,
        மனமகிழப் பிரிவர், புலவர்.

  1. உடையார்முன், இல்லார்போல், ஏக்கற்றும் கற்றார்,
     கடையரே, கல்லா தவர்.

     ஆசிரியர்முன் ஏக்கத்தோடு கற்றாரே,
        கற்றார்; மற்றயார் கல்லாரே.

  1. தொட்(டு)அனைத்(து) ஊறும், மணல்கேணி; மாந்தர்க்குக்,
      கற்(று)அனைத்(து) ஊறும், அறிவு.

     தோண்டுஅளவே, ஆற்றுமணல் நீர்தரும்;
        கற்ற அளவே, அறிவும்.
.
  1. யாதானும், நாடுஆம்ஆல், ஊர்ஆம்ஆல், என்ஒருவன்?
     சாம்துணையும், கல்லாத ஆறு.

    உலகஉறவு தருகல்வியைச், சாம்வரை
       ஏன்தான் கல்லாத நிலையோ?

  1. ஒருமைக்கண், தான்கற்ற கல்வி, ஒருவற்(கு),
      எழுமையும், ஏமாப்(பு) உடைத்து.

     ஓர்பிறப்பில் கற்ற கல்வி,
        ஏழு பிறப்புக்களிலும், பாதுகாப்பு.
.
  1. தாம்இன்(பு) உறுவ(து), உல(கு)இன்(பு) உறக்கண்டு,
     காம்உறுவர், கற்(று)அறிந் தார்.

     தம்கல்வி இன்பத்தை, உலகமும்
       பெற்றால், கற்றவர் இன்புறுவர்.

  1. கே(டு)இல் விழுச்செல்வம், கல்வி; ஒருவர்க்கு,
      மா(டு)அல்ல, மற்ற யவை.

    கேடுஇல்லாச் செல்வம், கல்வியே;
       மற்றவை செல்வங்கள் அல்ல.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 041. கல்லாமை)

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue