தமிழ் வரலாறு – Bharathidasan poem

தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்

chera chozha pandiyar01
கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக்
கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே)
நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல
நாகரி கத்துணை நம்தமி ழாகும்
வாளுக்குக் கூர்மையைப் போல — அது
வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே)
இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ்
இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும்
அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ்
ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே)
அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ்
அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம்
மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர்
மேல்வைத்த நூலேஅகத்தியமாகும்! (கே)
நாடுதொல் காப்பிய நூலும் — இங்கு
நம்மவர் கொள்கைந வின்றிடவில்லை
ஏடுகள் தந்தன ரேனும் — தமிழ்
இயற்கைக்க ருத்தந்த நூற்களில் இல்லை (கே)
கல்லையும் செம்பையும் கண்டே — இரு
கைதொழும் கொள்கைத மிழ்க்கொள்கை இல்லை
நல்லொழுக் கம்சிறப் பென்னும் — அறம்
நாடி அதன்திறம் பாடும்த மிழ்தான்! (கே)
ஆன்மாவை ஒப்புவ தில்லை — தமிழ்
அணுவென்று கூறிடும் உயிரினை அஃதே!
கோனாட்சி தன்னைச்சி ரிக்கும் — அது
கோலெடுத் தோன்செயல் என்றுவெ றுக்கும் (கே)
(உயிரும் நுண்மையும் அணுவென லாகும்’ என்பது
பிங்கலந்தை. கோல் என்பது கொல்லுவது; முதனிலை
திரிந்த தொழிற்பெயர். அக்கோல் என்பது ஆட்சிக்கும்
கோலன் அரசனுக்கும் பெயராயினமை காண்க. )
முள்முடிக் கோனாட்சி ஒப்பும் — தமிழ்
முன்னிருந் தாள்வோனைக் காவலன் என்னும்
ஆள் என்னும் சொற்பொருள் காண்பீர் — தனி
ஆளுக்கும், ஆள்கைக்கும் வேற்றுமை இல்லை — (கே)
காட்டாறும் மக்களைக் கொல்லும் — மூங்கிற்
காடும்க னல்பட்ட ழிந்திடும், அந்தக்
கேட்டுக்குத் தெய்வமென் றேபேர் — அதைக்
கெஞ்சல்இ றைஞ்சல்த மிழ்க்கொள்கை இல்லை (கே)
(‘தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும்’ என்பது
பிங்கலந்தை )
மாசற்ற எண்ணத்தி னாலே — இன்ப
வாழ்வைஅ டைவது நந்தமிழ்க் கொள்கை
ஈசன்என் றேஒன்றைக் கூறி — இடர்
ஏற்பதை நம்தமிழ் ஏற்பதுமில்லை (கே)
( ‘மாசற்ற கொள்கை மனத்தில் உதித்தத் கால ஈசனைக்
காணும் உடம்பு’ என்பது ஒளவைக்குறள், மாசற்ற
எண்ணத்தைவிட வேறாக ஒருபொருள் உன்னை
நினைப்பார்க்கு மறுப்பாகும். )
முருகெனல் அழகிள மைக்காம் — எனில்
முருகனை நந்தமிழ் ஒப்புவ தில்லை
விரிவுறு முல்லைநி லத்தில் — வரும்
வேட்கையை மால்என்று நந்தமிழ் சொல்லும் (கே)
கோயிலும் மன்னவன் இல்லம் — அந்தக்
கோயில்வ ணங்கும்இ டந்தானுமில்லை!
தாயும் தகப்பனும் அன்றோ — தொழத்
தக்கவர் ஆவர்என் றேதமிழ் சொல்லும் ! (கே)
சாதி மதம்தமிழ் இல்லை! — அந்தச்
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை
தீதுறு ‘தெவ்வே’ப கைமை — அந்தத்
தெவ்வில் விளைந்தது தேவர்எ னுஞ்சொல் (கே)

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue