கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்

அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

கவிஞாயிறு தாராபாரதி 9  & 10

பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின்
பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி!
கையிரண்டு போதாது கயமைக் கென்றே
கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்!
மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற
‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்!
செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச்
சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9)
வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு,
விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்!
நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்!
நோகாமல் இலக்கடையும் நுட்பம் இல்லை!
சிறுங்கற்கள் சேர்ந்தெழுந்த சிகரம் போலே
சிந்தனைகள் சேருமெனின் தெரியும் வெற்றி!
குறுஞ்செயல்கள் நமையாங்கே கொண்டு செல்லும்!
கொண்டசெயல் வேலையல்ல வேள்வி என்றார்! (10)

– சந்தர் சுப்பிரமணியன்
கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue