சிரியுங்கள் – வெ.அரங்கராசன்

sirippu01

சிரியுங்கள் 

       [ இடுக்கண் வருங்கால் நகுக –  திருக்குறள் 063:  0621 ] 
சிரியுங்கள்…சிரியுங்கள்….
சிந்தை குளிரச் சிரியுங்கள்….
சந்திப்புத் தொடரவே
சிந்தித்துச் சிரியுங்கள்….
சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர்
சிரிக்காத போதும் சிரியுங்கள்….
சிரிப்புக்காகச் சிரிக்காமல்
சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்….
மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்…..
மனத்தை மதித்துச் சிரியுங்கள்…..
மனம்விட்டுச் சிரியுங்கள்….
மனம்மகிழ்ந்து சிரியுங்கள்…..
நோய்விட்டுப் போக
வாய்விட்டுச் சிரியுங்கள்…..
காய்விட்டுக் கனிதொட்டுத்
தேன்சொட்டச் சிரியுங்கள்….
நொந்துபோன நெஞ்சினிலே
வந்துவாழும் நோய்கள் எல்லாம்
வெந்து வீழ்ந்து சாகும்படி
முந்தி வந்து சிரியுங்கள்…..
யாழிசை மழலையின்
ஏழிசைச் சிரிப்பே போல
வாழும் காலம் எல்லாம்
கோலம் கொள்ளச் சிரியுங்கள்…..
முதல்நாள் சிரிப்பது போலவே
முப்பதாம் நாளும் சிரியுங்கள்….
மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால்,
முழுமை மனத்துடன் சிரியுங்கள்…..
சோகப் பயிர்கள்
சாகும்படி சிரியுங்கள்….
சுகம்மிகு பயிர்கள்
செழிக்கும்படி சிரியுங்கள்….
சந்தி சிரிக்காமல்
இங்கிதம் தெரிந்து
சந்தமாய்ச் சிரியுங்கள்….
சந்தனமாய்ச் சிரியுங்கள்….
ஒப்புக்குச் சிரிக்காமல்
உண்மையாய்ச் சிரியுங்கள்….
எண்ணத்தில் குழிஏதும் விழாமல்
கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்…..
ஆணவச் சிரிப்பின்
வேரினை அறுத்தெறிந்து
பாரினை வென்றிடப்
பணிவோடு சிரியுங்கள்….
அசட்டுச் சிரிப்புக்குள்
அகப்பட்டுக் கொள்ளாமல்
இடம்அறிந்து— வெல்லும்
தடம்அறிந்து சிரியுங்கள்…..
விரக்திச் சிரிப்பினை
விரட்டிவிட்டு—நல்ல
நம்பிக்கை வந்[து]உதிக்கத்
தெளிவாகச் சிரியுங்கள்….
கூனிக் குறுகும் சிரிப்பைக்
குப்பையில் போட்டு விட்டு
மேனி குலுங்கி மகிழ்ந்திட
மேன்மை யாகச் சிரியுங்கள்….
காரியச் சிரிப்புக்குக்
கறுப்புக் கொடிகாட்டித்
தோழமை உணர்வோடு
ஆழமாகச் சிரியுங்கள்…..
விளையாட்டு வினையாகி
வேதனைகள் ஊட்டாமல்
வெற்றிகள் விளைந்து
சுற்றிவரச் சிரியுங்கள்…..
காந்தி போலச் சிரியுங்கள்….சூரிய
காந்தி போலச் சிரியுங்கள்….
தோகைமயில் ஆடும்படி—கார்
மேகமெனச் சிரியுங்கள்…..
அன்புக்குத் தூதுவிட்டு
அருளுக்குப் பாதை போட்டு
மன்றத்தில் உலாவரும்
தென்றல் போலச் சிரியுங்கள்….
தனியாகச் சிரித்துத்
“தனிப்பட்டம்” வாங்காமல்
துணையோடு துணைநின்று
துணிவாகச் சிரியுங்கள்….
பந்த பாசம் சொந்தமாக
இந்தப் புவியும் சொர்க்கமாகச்
செந்தமிழின் சந்தம் போலச்
எந்த நாளும் சிரியுங்கள்…..
கேலிச் சிரிப்பும்
ஏளனச் சிரிப்பும்
கிண்டல் சிரிப்பும்
நக்கல் சிரிப்பும்
இல்லாது ஒழிந்திட
உதயத்துக் கதிர்போல
உளம்மகிழச் சிரியுங்கள்…..
வெற்றியிலும் சிரியுங்கள்…
வீழ்ச்சியிலும் சிரியுங்கள்….
விழுந்தாலும் மேலே
எழும்வரை சிரியுங்கள்….
விடியலுக்குச் சிரியுங்கள்–விந்தை
படியும்படி சிரியுங்கள்….
விளங்கும்படி சிரியுங்கள்—வெளிச்சம்
வழங்கும்படி சிரியுங்கள்….
சிரியுங்கள்…சிரியுங்கள்…
சிந்தித்துச் சிரியுங்கள்….
 –  பேரா.வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue