Skip to main content

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக

பூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம்
புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம்
புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில்
புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை
நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர்
நயத்தகு மேடையில் நடன ஆட்டம்
தீத்திறம் இல்லா நம்மோர் செயலால்
திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள்
தலைமை தலைமை என்றே நம்மோர்
தலைவர் என்றே அனைவரும் உள்ளார்
தலைமை காக்கும் தலைமை இல்லை
தவநெறி போற்றும் தொண்டர் இல்லை
அவனிவன் எனறே குறையாய் மொழிவான்
அவனியே போற்றும் நிறையை எள்ளுவான்
தவநிறை நம்மின் தடத்தை மறக்க
தடையாய் கல்வி முறையாய்க் கொண்டான்
ஆசையாய் பெற்ற அருந்தமிழ்ச்  சேயை
ஆங்கில வழியே அறியச் செய்வான்
மாசிலாக் குறளைக் கற்பது எப்படி
நாநிலம் போற்றும் இலக்கியம் துறந்து
காசினைப் போற்றும் கல்வியாய் உள்ளது
நயத்தகு கல்விக் கூடம் தன்னில்
நாசச் செயலாய் கொலையும் செய்தான்
அன்பாய் வளர்த்த பெற்றோர் தாமும்
அறநெறி காணாக் கல்வி நெறியால்
நேயம் மறந்து கொலைவெறி கொண்ட
நெடிய துன்பம் ஏனோ? எனோ?
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா
தந்த கொள்கை எங்கே? எங்கே?
விந்தை பாவேந்தன் சிந்தை பாரதி
விரிந்த எண்ணம் எங்கே? எங்கே?
சொந்தம் மறுத்து சுடரொளி கண்ட
சமத்துவ வள்ளலார் பாதை எங்கே?
நொந்தே பெற்ற விடுதலை வேள்வி
நோயாய் வந்தது ஏனோ? ஏனோ?
பந்தம் போற்றி வாழ்ந்த நம்மோர்
பாசம் மறந்து வாழ்வது ஏன்?ஏன்?
சந்தைப் பொருளாய் கல்விச் சாலை
சந்ததி  மாய்க்கும் ஈனம் அன்றோ?
தொந்தி குளிர  உணவு வேண்டா
மந்தை காட்டும் நீரும் வேண்டா
சிந்தை சாய்க்கும் மதுவும் வேண்டா
முந்து கல்வி அனைத்தும் தமிழில்
முழுதாய் ஏற்கும் முறைமை கொள்வோம்
எந்தை காத்த அரசுக் கல்வி
சீராய்த்  தமிழகம் முழுமை தருக
காத்த எம்மோர் வழிவழி  மொழியே
காக்கும் காக்கும் ஆள்வோர் அறிக.!



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue