Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 63

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 62. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 25

 

ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன்.

பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று எதிர்பார்த்துப் பிரித்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் என் கலக்கத்தை மிகுதிப்படுத்தியது. நான் சோழசிங்கபுரத்துக்குச் சென்றபோது, அவன் இல்லாமற் போனதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பண முடையால் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தான்படும் துன்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான்.

இந்த வேளை பார்த்துத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்ச் சுகமாக உட்கார்ந்திருப்பதாகக் குறித்திருந்தான். கடைசியாக, எப்படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் தரவேண்டும் என்றும், எந்தக் காரணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது என்றும், இந்தச் சமயத்தில் இந்த உதவி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையே அடியோடு போய்விடும் என்றும் எழுதியிருந்தான்.

தங்கைக்குத் தையல்பொறி வாங்கித் தருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டேன். அதற்காக அந்த மாதச் சம்பளத்திலிருந்து நூறு ரூபாய் தனியே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் இரண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து வைத்தால் அவளுக்கு அதை வாங்கிக் கொடுத்துவிடலாம், அவ்வாறு செய்தால் பொருள் வகையிலும் அந்தக் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்ததாகும். அதைக் கொண்டு அக்கம் பக்கத்தாருக்குச் சோளி சொக்காய் முதலானவை தைத்துக் கொடுத்துத் தன் குடும்பத்துக்குச் சிறு வருவாயும் தேடிக் கொள்வாள் என மகிழ்ந்திருந்தேன். என் திட்டமெல்லாம் வீண் மனக்கோட்டை ஆனதாக வருந்தினேன்.

இரண்டாயிர உரூபாயை யாரிடமிருந்து நான் எப்படி வாங்கித் தருவது? தந்தையாரின் மளிகைக்கடை வீட்டுச் செலவுக்கு வேண்டிய வருவாயைக் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நிலையில் நான் அவரைப் பண உதவி கேட்க முடியாது. அவருக்கு இந்தச் செய்தி தெரிந்தாலும் என்மேல் வருத்தப்படுவார்.

மாலனுக்கு நான் உதவி செய்யப் போவதாகத் தெரிந்தால் அந்தப் பணம் வீணாகி விடும், திரும்பி வராது என்று அம்மாவும் தடுப்பார். நான் உதவி செய்யாமல் இருப்பதும் முடியாது. மாலனும் பொறுப்போடு பணத்தைக் கையாள்பவனாகவும் தெரியவில்லை. வீண் செலவு செய்பவன் அல்ல. ஆனால், வழியல்லா வழியில் போய் ஏமாந்து கெடுகின்றான். என்ன செய்வது என்று மூன்று நான்கு நாள் கலங்கிக் கொண்டிருந்தேன்.

கடைசியில் ஆயிர ரூபாயாவது அனுப்புவது என்றும் கையில் இருந்த இருநூறோடு இன்னும் எண்ணூறு கடன் வாங்கிச் சேர்த்து அனுப்புவது என்றும் முடிவு செய்தேன். யாரிடம் சென்று கடன் கேட்பது? நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடமே சென்றேன். அவரும் பணவகையில் பலருக்குக் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவர். ஏமாந்த கதைகளை எல்லாம் என்னிடம் விரிவாகச் சொல்லிக் கடைசியில் பணம் கொடுக்க இசைந்தார். மாதம் நூறு நூறாக எட்டு மாதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கொடுத்தார்.

ஆயிரமும் சேர்த்து மாலனுக்கு அனுப்பியபோது விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். கடன் வாங்கி ஆலை வைக்கும் முயற்சி தொடங்கியிருக்கக் கூடாது என்றும் அங்கேயே இருந்து இரவும் பகலும் தொழிலைக் கவனிக்கவேண்டும் என்றும், இனிமேல் சாமியார்கள் பின்னே சுற்றக்கூடாது என்றும், மூடநம்பிக்கைகளைக் குறைத்து உழைப்பையும் உண்மையையும் நம்ப வேண்டும் என்றும் கடுமையாகவே எழுதியிருந்தேன். அவனுடைய மனைவி கற்பகத்தை என் தாய் கண்டு பேசினார் என்றும், அவளாகக் கணவனை விட்டு வரவில்லையாம் என்றும், கணவனோடு எப்போதும் வாழ விரும்புகிறாளாம் என்றும் மாமனார் கொடுத்தால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வற்புறுத்திக் கேட்பது தகாது என்றும், எனக்கு நேரே தெரியாத செய்திகள் போல், அவனுடைய மன உணர்ச்சியைப் புண்படுத்தாத வகையில் குடும்பத்தைப் பற்றியும் அறிவுரை எழுதியிருந்தேன்.

சந்திரன் போல் அவன் கடிதம் எழுதாமல் இருக்கவில்லை. அந்த வகையில் அவன் ஒருபடி மேலானவன் என்றே சொல்ல வேண்டும். உடனே கடிதம் எழுதியிருந்தான். பணம் வந்து சேர்ந்ததற்காக நன்றி தெரிவித்தான். இன்னும் ஓராயிரம் அனுப்ப முடிந்தால் பேருதவியாகும் என்றும் எழுதியிருந்தான். இனிமேல் தொழிலை அக்கறையுடன் கவனிக்க முடியும் என்று உறுதியும் கூறியிருந்தான்.

ஆனால், தன் மனைவியைப்பற்றி ஒரு சொல்லும் எழுதவில்லை. ஒருகால் இந்தத் துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது என்றும், பணம் வாங்கத் திறமையில்லாத என்னுடைய அறிவுரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எண்ணியிருப்பான். கல்லூரியில் படித்தபோதே சோதிடத்தை நான் நம்பவில்லை. அப்போது, ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று இகழ்ந்தவன் அவன். அதே மனநிலையோடு இப்போதும் என் அறிவுரையை இகழ்ந்து ஒதுக்கியிருக்கக் கூடும். இப்படி மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிப் பணம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணிவிட்டிருப்பான். எப்படியோ போகட்டும். தொழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால் போதும் என்று ஆறுதல் அடைந்தேன்.

ஐந்தாம் மாதம் மனைவியையும் மாதவியையும் அழைத்து வருவதற்காக இரயில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மாலனுக்கு உதவி செய்ததைப்பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். தையல்பொறி வாங்குவது பற்றி அம்மா ஏதாவது கேட்டாலும் திருடனைத் தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

நான் வீட்டுக்குள் நுழைந்தவுடனே தங்கை மணிமேகலையைத் தான் கண்டேன். அவளுக்கு செய்வதாகச் சொன்ன உதவியை நினைத்து மனம் திக்கென்றது. ஒருவாறு மனத்தை மாற்றிக்கொண்டு பேசினேன். மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அம்மா இல்லை. எங்கே என்று கேட்டேன். கற்பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக சொல்லவே அம்மாவும் அவர்களோடு நேற்றுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாள் தங்கை. “நேற்று கற்பகம் அழ, மாமி அழ, வீடு ஒரே துயரமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக அழுதார்கள்” என்றாள் மனைவி.

“என்ன காரணம்? திடீரென்று இறந்துபோன காரணம்” என்றேன்.

“யாருக்குமே தெரியாது. அம்மா வந்தால்தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் வந்தார்.

என்னென்னவோ எண்ணினேன். சந்திரன் ஏதாவது கொடுமை செய்திருப்பானோ என்றும் ஓர் எண்ணம் வந்தது. சே, என்ன கெட்டவனாக இருந்தாலும் அந்த எல்லைக்குப் போயிருக்க மாட்டான் என்று தெளிந்தேன்.

அன்று பகல் உணவுக்கு உட்கார்ந்தபோது, பாக்கியம் தங்கையையும் மனைவியையும் உடன் உட்கார்ந்து உண்ணுமாறு வற்புறுத்தினார். “மாதவி தூங்குகிறாள். அவள் எழுவதற்கு முன்னே சாப்பாட்டு வேலையை முடித்து விடலாம்” என்று வற்புறுத்தி உண்ணச் செய்தார்.

உணவின் போது, கற்பகத்தின் பேச்சைத் தங்கை தொடங்கினாள். “வீட்டில் பிறந்த பெண்ணும் நன்றாக இல்லை. புகுந்த பெண்ணும் இப்படி ஆகிவிட்டாள்” என்று வருந்தினாள். மறுபடியும் அவளே, “பெண்ணாய்ப் பிறந்தவர்கள் எல்லாரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. தக்க கணவர் கிடைக்காத பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். நம் நாட்டில் மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?” என்றாள்.

உணவு பரிமாறிக்கொண்டிருந்த பாக்கியம், “மணிமேகலைக்குத் தக்க கணவன் இல்லையா? அவளே துறவியாகிவிட்டாள். ஆண்டாளுக்குக் கணவன் கிடைக்கவில்லையா? மனிதரை மணக்க மாட்டேன் என்று உறுதி பூண்டார்” என்றார்.

“நல்ல கணவராக இல்லை என்று தெரிந்தால் நாமும் அப்படி இருந்துவிடவேண்டும்” என்றாள் தங்கை.

என் இலையில் மோர் விட்டபடியே பாக்கியம் அதற்கும் மறுமொழி சொன்னார். “ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், மீராவைப் போல் திருமணம் ஆனபிறகு கணவனைக் கைவிட்டுப் போகக்கூடாது” என்றார்.

 

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue