Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் : வெ. அரங்கராசன்





(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

திருக்குறள் அறுசொல் உரை

  1. பொருள் பால்
  2. குடி இயல்
 அதிகாரம் 101. நன்றி இல் செல்வம்   
                  பெற்றவர்க்கும், மற்றவர்க்கும்  நன்மையால்
                  உற்றதுணை ஆகாத பெரும்செல்வம்

  1. வைத்தான்வாய் சான்ற  பெரும்பொருள்அஃ(து)உண்ணான்,
           செத்தான்செயக்கிடந்த(து)  இல்.
இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான்,
எப்பயன் இல்லான்; செத்தான்தான்.

  1. “பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும்,
      மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
“செல்வத்தால் எல்லாம் ஆகும்”என,
மயங்கும் கருமி, சிறப்புறான்.

  1. ஈட்டம் இவறி, இசைவேண்டா ஆடவர்
      தோற்றம், நிலக்குப் பொறை.
பெரும்செல்வம் குவித்தும், கொடைப்புகழ்
பெறாதான், பூமிக்குச் சுமைதான்.

  1. எச்சம்என்(று), என்எண்ணும் கொல்லோ….? ஒருவரால்
      நச்சப் படாஅ தவன்.
& கருமி, தனக்குப்பின், அடையாளமாக
எதனை விட்டுச் செல்வானோ…..?

  1. கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் இல்லார்க்(கு), அடுக்கிய
      கோடிஉண் டாயினும் இல்.
கோடி கோடியாக இருந்தாலும்,
கொடாதான் நுகராதான், ஏழைதான்.

  1. ஏதம் பெரும்செல்வம், தான்துவ்வான், தக்கார்க்(கு)ஒன்(று)
      ஈதல் இயல்(பு)இலா தான்.
நுகராதான், கொடாதான் பெரும்செல்வம்,
அவனுக்கும் துன்பமே தரும்.

  1. அற்றார்க்(கு)ஒன்(று) ஆற்றாதான் செல்வம், மிகநலம்
      பெற்றாள், தமியள்,மூத்(து) அற்று.
மணம்ஆகா அழகியின் மூப்பும்,
கருமியின் செல்வமும் வீண்ஆம்.

  1. நச்சப் படாதவன் செல்வம், நடுஊருள்
      நச்சு மரம்பழுத்(து) அற்று.
கருமியின் விரும்பப்படாச் செல்வம்,
நடுஊரில் பழுத்த நஞ்சுமரம்.

  1. அன்(பு)ஒரீஇத், தன்செற்(று), அறம்நோக்கா(து), ஈட்டிய
      ஒண்பொருள், கொள்வார் பிறர்.
அன்பு,அறம் மறந்து, வருத்திப்
பெற்றபொருளை மற்றவர் கொள்வார்.

  1. சீர்உடைச் செல்வர் சிறுதுனி, மாரி
      வறம்கூர்ந்(து) அனைய(து) உடைத்து.
       கொடைச்செல்வர் பெற்ற வறுமை,
மழைமுகிலின் வறட்சிக்குச் சமம்.
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்