பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள்.
துறந்தார் என்பதற்கு இளமை வாழ்க்கையைத் துறந்து துறவியாகிறவர்கள் என்றே அனைவரும் பொருள் கூறுகின்றனர். இளமையில் இல்வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வது தமிழர் நெறியல்ல. இல்வாழ்க்கையும் அறவாழ்வுதான் என்பதற்காகத்தான் அதை இல்லறம் என்கின்றனர். சமணர்களில் இளமையில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் துறவு மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அந்தச் சமய வாழ்வைப் பொதுவில் கூறியிருப்பார்கள் என எண்ண முடியவில்லை. இல்லற நிறைவில் துறவு மனப்பான்மையுடன் இல்லறத்திலிருந்தே வாழ்க்கையை நடத்த வேண்டும். குடும்பத்தைக் கைவிட்டுக் காட்டுக்குச் செல்பவன் நல்வினையாளன் அல்லன்.
எனவே, துறந்தார் என்பதற்குத் தீய பழக்க வழக்கங்களைத் துறந்தவர்கள் எனக் கருதுவதே சிறப்பாகும்.
இளமை வேகத்தில் தவறான களியாட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடக் கூடாது. இளமை நிலையற்றது, நாளை நரையும் (நரை முடியும்) வரும், திரையும் (தோல் சுருக்கமும்) வரும் என்பதை உணர்ந்து இளமையிலேயே அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். அறச்செயல்களின் பயன் முதுமையில் கை கொடுக்கும். இல்லையேல் தானாகக் கைத்தடி ஊன்றிக்கொண்டு தடுமாறி நடக்க வேண்டுமே தவிர யாரும் துணைக்கு வரார்.
‘தங்கை’ படத்தில் கண்ணதாசன் “இனியது இனியது உலகம்” பாடலை
நாளை பொழுது யாருக்கென்று
கேள்வி கேட்டுப் பதில் தேடு
என முடித்திருப்பார். நாளைய பொழுது நமதில்லை என்பதை உணர்ந்து இன்றே பிறர் பயனுற வாழ வேண்டும்.
இளமையில் தவறான வழிகளில் மகிழ்ந்து முதுமையில் வருந்தாதே.
Comments
Post a Comment