Skip to main content

நாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

அகரமுதல


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.
பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள்.
சொல் விளக்கம்: நரை = மூப்பின் அடையாளமான வெண்முடி; வரும் என்று =வருமென்று; எண்ணி = நினைத்து; நல் = நல்ல; அறிவாளர் = அறிவுடையவர்கள்; குழவியிடத்தே = இளமைப் பருவத்தில்; துறந்தார் = கேடானவற்றைத் கை விட்டவர்கள்; புரை = குற்றம்; தீரா = நீங்காத; மன்னா = நிலைபெறாத; இளமை = இளமைப் பருவத்தை; மகிழ்ந்தார் = விரும்பியவர்; கோல் = கைத்தடியை; ஊன்றி = ஊன்றிக்கொண்டு; இன்னாங்கு = துன்பத்துடன்; எழுந்திருப்பார் = இருப்பார்.
துறந்தார் என்பதற்கு இளமை வாழ்க்கையைத் துறந்து துறவியாகிறவர்கள் என்றே அனைவரும் பொருள் கூறுகின்றனர். இளமையில் இல்வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வது தமிழர் நெறியல்ல. இல்வாழ்க்கையும் அறவாழ்வுதான் என்பதற்காகத்தான் அதை இல்லறம் என்கின்றனர். சமணர்களில் இளமையில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் துறவு மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அந்தச் சமய வாழ்வைப் பொதுவில் கூறியிருப்பார்கள் என எண்ண முடியவில்லை. இல்லற நிறைவில் துறவு மனப்பான்மையுடன் இல்லறத்திலிருந்தே வாழ்க்கையை நடத்த வேண்டும். குடும்பத்தைக் கைவிட்டுக் காட்டுக்குச் செல்பவன் நல்வினையாளன் அல்லன்.
எனவே, துறந்தார் என்பதற்குத் தீய பழக்க வழக்கங்களைத் துறந்தவர்கள் எனக் கருதுவதே சிறப்பாகும்.
இளமை வேகத்தில் தவறான களியாட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடக் கூடாது. இளமை நிலையற்றது, நாளை நரையும் (நரை முடியும்) வரும், திரையும் (தோல் சுருக்கமும்) வரும் என்பதை உணர்ந்து இளமையிலேயே அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். அறச்செயல்களின் பயன் முதுமையில் கை கொடுக்கும். இல்லையேல் தானாகக் கைத்தடி ஊன்றிக்கொண்டு தடுமாறி நடக்க வேண்டுமே தவிர யாரும் துணைக்கு வரார்.
‘தங்கை’ படத்தில் கண்ணதாசன் “இனியது இனியது உலகம்” பாடலை
நாளை பொழுது யாருக்கென்று
கேள்வி கேட்டுப் பதில் தேடு
என முடித்திருப்பார். நாளைய பொழுது நமதில்லை என்பதை உணர்ந்து இன்றே பிறர் பயனுற வாழ வேண்டும்.
இளமையில் தவறான வழிகளில் மகிழ்ந்து முதுமையில் வருந்தாதே.
(இன்பம் தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்மின்னம்பலம், 15.09.2019

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue