Skip to main content

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு

 




(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 13-15-தொடர்ச்சி)

‘தன்னல மறுப்பு’
வட மொழியிலே ‘தியாகம்’ என்பது – தமிழிலே ‘தன்னல மறுப்பு’ என்றாகும்.

மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடும் ஆகும்.

இதனை, ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர்’ என்று,

புறநாறூறு இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.

‘கோழி’
கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி, இறுதியில் தன்னையே உண்ணும்படி, உதவி, மடிகிறது.

‘ஆடு’
காடு மலை எல்லாம் தானே அலைந்து மேய்ந்துவந்து. தன்னை விலைகொடுத்து வாங்கியவன் நிலத்திலே வந்து புழுக்கையும் நீரும் ஆகிய எருவையிட்டு, அவன் நிலத்தை விளைய வைக்கிறது இறுதியாகத் தானும் மடிந்து அவனுக்கு உணவாகப் பயன்படுகிறது.

‘மாடு’
தன்னை விலைகொடுத்து வாங்கியவனுக்காகக் காலமெல்லாம் உழைக்கிறது. அவன் போடுகிற தீனி இதன் உழைப்புக்குக் கூலியாகாது. எப்படி? எவ்வளவு (புல்), வைக்கோல்) தீனி போடுகிறானோ அந்த அளவுக்குச் சாணி கொடுத்து விடும். எந்த அளவு கழுநீர் தருகிறானோ அந்த அளவு சிறுநீர் கொடுத்துவிடும்.

அன்றன்றைக்கு, அது (மாடு) பற்றுவரவு நேர் பண்ணி விடுகிறது.

அதன் உழைப்பெல்லாம் தியாகம். ஆடு கோழிகளைப் போல் அல்லாமல்,

மாடுகளின் தியாகத்தை நினைக்கும்போது, மயிர்க் கூச்செறிகிறது.

காலமெல்லாம் உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாகி இறந்து, அவனுக்கு உணவாகவும் பயன்படுகிறது உழவன் உரித்த அதன் தோலை மரத்திலே காய வைத்தான் –

அந்த மாட்டின் தோல் ‘சொல்கிறது’.

‘ஐயோ, கவுண்டர் தரையில் நடக்கிறாரே, அவர் காலைக் கல்லும் முள்ளும் குத்துமே – என் தோல் எதற்காக இருக்கிறது – செருப்பாகத் தைத்து போட்டுக் கொண்டு நடக்கலாமே’ – என்று சொல்கிறது.

அவ்வளவு தியாகம் மாடுகளுக்கு.

இவையனைத்தும் கதையல்ல.

உண்மை நடைமுறை.

இவற்றைப் பார்க்கும்போது –

மக்களாகிய நாம் என்ன தியாகம் செய்கிறோம்? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நலமாகும்.

இன்னும் இதை அறிவுறுத்தவே – எல்லாச் சமய வழிபாடுகளிலும், சில தியாகப் பொருள்களைக் கையாண்டு வருகிறார்கள்.

முசுலீம் சமுதாயத்தில், ஊதுபத்தி கொளுத்தி வைத்து ‘பாத்தியா’ எனும் இறைவழிபாடு நடக்கும். பாத்தியா முடிந்ததும் இதற்குப் பேருதவி செய்த ஊதுபத்தி அங்கே இருக்காது. எரிந்து சாம்பலாகிக் கிடக்கும்.

கிறித்தவ சமுதாயத்தில், ‘மெழுகுவர்த்தி’ கொளுத்தி வைத்து இறைவழிபாடு நடக்கும். செபம் முடிந்ததும் அதற்குத் துணையாக இருந்த மெழுகுவர்த்தியை அங்கே காணமுடியாது: தன்னையே அது அழித்துக்கொள்ளும்.

இந்துக்களின் கோவில்களிலே, சூடம் ஒரு கட்டிகொளுத்திவைத்து இறைவழிபாடு நடைபெறுகிறது. வழிபாடு முடிந்ததும், அதற்குப் பெருந்துணை செய்த சூடத்தைக் காணமுடியாது. அது தன்னையே அடியோடு அழித்துக்கொள்ளும்.

இவையனைத்தையும் பார்க்குபோது – மக்கட் சமுதாயத்துக்கு – தியாக வாழ்க்கை இன்றியமையாதது என்பதை அறிவறுத்தவே – எல்லாச் சமயச் சான்றோர்களும் இத் துணைப் பொருட்களைக் கையாண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

‘மழை’
மழை நீரைப் பற்றிச் சிந்திப்போம்.

மழை உணவு தானியங்களையெல்லாம் விளைய வைத்துக் கொடுத்து, நீ அதிகமாக உணவு உட்கொள்ள அதற்குத் துணையாகக் காய்கறிகளையும் விளைய வைத்துக் கொடுத்து, இவை இரண்டையும் சேர்த்து உண்ணுகிறவருக்கு விக்கல் எடுத்தால்,

‘அடே நான் இருக்கிறேன் – என்னைக் குடித்துப் பிழைத்துக்கொள்’ என்று, அந்நேரத்தில் அவனுக்கு உதவி, அவன் வயிற்றிலே போய் விழுந்து உணவாகமாறி மடிந்துவிடுகிறது. இந்தக் கருத்து வெளிப்படவே திருவள்ளுவர்.

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
‘துப்பா யதூஉம் மழை,’

– என்ற குறளில் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

பகுத்தறிவு பெற்ற மக்களாகிய நாம், நீரினிடத்தும், விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும், உயிரில்லாத (சடப்) பொருள்களிடத்தும் காணப்படும் தியாக வாழ்வை நினைத்தாவது தியாகவாழ்வு வாழ்வது நலமாகும்.

ஏனெனில்,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது

என்ற வள்ளுவரின் வாக்கு, பிறரை வாழவைத்து வாழ்வது என்பதும், பிறர் வாழ்வுக்குத் தான் துணை புரிந்து வாழ்வது என்பதுமாகும்.
————-

தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.

புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் கொண்டு எல்லாரும் இதே வேலையாக வர ஆரம்பித்து விட்டால் பிணங்களை எழுப்புவதைத்தவிர புத்தர் பெருமானுக்கு வேறு என்ன வேலை இருககமுடியும்? அது மட்டுமல்லாமல், சிலரை எழுப்ப மறுத்தால் பொல்லாப்பும் பகையும் ஏற்பட்டுவிடும என்பதெல்லாம் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆனால் புத்தர் என்ன செய்தார் தெரியுமா? மிக அன்புடன், அவனிடம் “இந்த ஊரில் சாவு நேராத வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா! உன் மகனை நான் எழுப்பித் தருகிறேன்” என்றார்.

அவன் வெகு மகிழ்ச்சியாக ஓடினான். ஒவ்வொரு வீடாகப் போய்ச் சாவு நேராத வீட்டைத் தேடினான், கடுகு வாங்குவதற்காக . ஆனால். அவனுக்குக் கிடைத்த பதில் எல்லாம் “என் தாய் இறந்துவிட்டாள்; தந்தை இறந்திருக்கிறார்: தங்கை , தமக்கை, பிள்ளை, பேரப்பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் அல்லது பலபேர் இறந்திருக்கிறார்கள்” என்பது தான்.

இப்படி ஊர் முழுவதும் அலைந்து திரிந்த பிறகுதான், ‘சாவை யாராலும் தடுக்க முடியாது; எல்லோருக்கும் ஏற்படும் துன்பம்தான் நமக்கும் ஏற்பட்டுள்ளது’ என்ற உண்மையை உணர்ந்தான். திரும்பவும் புத்தரிடம் போகும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டான்.

புத்தர் பெருமான் அவர்களது இனிய போதனை அவனுக்கு உண்மையை உணர்த்திவிட்டது.

இதைப் படிக்கும் நாமும், நம்மால் முடியாத காரியத்தைச் செய்யும்படி நம்மை யாரேனும் வேண்டினால், கடுஞ்சொற்களைச் சொல்லி அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல், இனிய சொற்களால் அவர்களே உண்மையை உணரும்படி செய்வது நல்லது.
000

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்