Posts

Showing posts from August, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ?

Image
     ஃஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         30 August 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை – தொடர்ச்சி ). என் தமிழ்ப்பணி சொல்லின் எவனோ? 16 கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர் சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மணப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு பட்டு அவள் அன்பைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்து பழகிய பின்னரே அவன் அவளை மணந்து கொண்டான். அன்று அவள் காதலுக்காக அவ்வாறு ஏங்கிக் கிடந்த அவனே, இன்று அவள் மனையில் கிடந்து மாளாத்துயரில் ஆழ்ந்து மடியுமாறு அவளை மறந்து பரத்தையர் சேரி சென்று வாழ்கிறான். கணவன் தகாவொழுக்கம் கண்டு அப்பெண் கடுந்துயர் உற்றாள்; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன; இரவு பகல் எப்போதும் அவன் நினைவேயாய்க் கிடந்து வருந்தினாள்: அவள் கண்கள் இடைவிடாது நீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன; அப்பெண்ணின் துயர் நி

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு

Image
      ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         29 August 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி ) பூங்கொடி கலை பயில் தெளிவு           நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக் கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;                    எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105           பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,                கோவிலில் மீனவன்            வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்                   சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110           வழிபா டியற்றி வாழும் அவர்பால் `இழிவாம் இச்செயல்!  இனிமேல் தமிழால் வழிபாட் டுரையை வழங்குக ‘ என்னலும்,                    மறியல் போராட்டம்                     `நெறியன் றாம்’என நிகழ்த்தினர் மறையோர்;                   மறியல் செய்தனன், மற்றவர் கூடிச்        115           சிறியன் இவன்தான் செருக்குற் றானெனத்     —————————————————————           பேறு – செல்வம், உயிர்த்தவள் – பெற்றவள், ஊண் – உணவு, உழலும் – வருந்தும்

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு

Image
     ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         27 August 2024         அ கரமுதல ( அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 13-15-தொடர்ச்சி ) அறிவுக்கதைகள் நூறு 16. தியாகக் கதை ‘தன்னல மறுப்பு’ வட மொழியிலே ‘ தியாகம்’ என்பது – தமிழிலே ‘தன்னல மறுப்பு ’ என்றாகும். மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடும் ஆகும். இதனை, ‘ பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர் ’ என்று, புறநாறூறு  இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது. ‘கோழி’ கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி, இறுதியில் தன்னையே உண்ணும்படி, உதவி, மடிகிறது. ‘ஆடு’ காடு மலை எல்லாம் தானே அலைந்து மேய்ந்துவந்து. தன்னை விலைகொடுத்து வாங்கியவன் நிலத்திலே வந்து புழுக்கையும் நீரும் ஆகிய எருவையிட்டு, அவன் நிலத்தை விளைய வைக்கிறது இறுதியாகத் தானும் மடிந்து அவனுக்கு உணவாகப் பயன்படுகிறது. ‘மாடு’ தன்னை விலைகொடுத்து வாங்கியவனுக்காகக் காலமெல்லாம் உழைக்கிறது. அவன் போடுகிற தீனி இதன் உழைப்புக்குக் கூ

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை

Image
     ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         23 August 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 15.  தமிழின் இனிமை தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “ இனிமையால் இயன்ற இளமகளிர் ” என்ற பொருள்படவரும் “ தமிழ் தழிஇய சாயலவர் ” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார்  சீவக சிந்தாமணி  என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர்  திருத்தக்கத் தேவர் . ‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’  என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின் இனிமைப் பண்பை பாராட்டிப் பரவியுள்ளனர். இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாகச் சொல்லாட விரும்பியவர் தமிழர்; தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாகும். நயம்பட உரைக்கும் நாநலம் வாய்க்கப் பெற்றவர் தமிழர்.  மக்கள் இன்சொல் கேட்க ம