Skip to main content

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்





இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது!

   கருங்கூந்தல் நிறைந்திருக்க
கன்னமதில் குழிகள்விழ
விளியிரண்டும் மீனெனவே
வெண்மைநிற முகத்தினிலே
   மருண்டோடி பார்த்திருக்க
   வட்டநிலா வருவதுபோல்
இடைஇருந்தும் தெரியாமல்
அவள்வருவாள் நடைபயின்று
   அதைக்காண ஆவலுடன்
  அன்றாடம் காத்திருப்பேன் !
   பலபேர்கள் வந்தாலும்
   பார்த்துவிடா என்பார்வை
   இவள்மட்டும் வந்தவுடன்
   எனைமீறிச் சென்றுவிடும்
   நினைவெல்லாம் அவளாக
   நிறைந்திருக்கும் காரணத்தால்
   அவள்வருகை மட்டுமெந்தன்
   அகத்தினுள்ளே புகுந்துவிடும் !
   சிலவேளை அவள்பார்ப்பாள்
   பலவேளை நான்பார்ப்பேன்
   மின்சாரம் பாய்வதுபோல்
   வேகமுள்ளே பரவிநிற்கும்
   என்பார்வை அவள்பார்வை
   இரண்டுமொன்றாய் இணைந்திடவே
   கண்களிலே பேசியவர்கள்
   கைபிடிக்க எண்ணிவிட்டோம் !
  இல்லறத்தில் நாமிணைந்தோம்
  இன்பவுலா சென்றுவந்தோம்
  அன்புநிறை காதலொடு
  அகமகிழ நாமிருந்தோம்
  ஈருடலாய் இருந்தாலும்
  ஓருயிரே என்றிருந்தோம்
  எங்களது காதலது
  இணையின்றி வளர்ந்ததுவே !
  பிள்ளைகள் பிறந்தார்கள்
  பேரின்பம் தந்தார்கள்
  உள்ளூர நாம்மகிழ்ந்தோம்
  உவகையுடன் கொஞ்சிநின்றோம்
  கைநிறைய பொருள்வந்து
  கண்ணியமாய் நாம்வாழ்ந்தோம்
  கடவுளது அருளினால்
  காதல்மேலும் வளர்ந்ததுவே !
  வளர்ந்துவிட்ட பிள்ளைகளும்
 இணைந்துவிட்டார் இல்லறத்தில்
  முதுமை வந்துவிட்டதனால்
  முடங்கிவிட்டோம் இருவருமே
  தனிமையெனும் நிலையெம்மை
   தவிக்கவைத்து நிற்கிறது
  இனிமைதனை நினைத்தேங்கி
   இருக்கின்றோம் இருவருமே !
  கட்டழகுக் கருங்கூந்தல்
  காந்தநிறை கண்மணிகள்
  மொட்டவிழ்த்த புன்சிரிப்பு
  முழுநிலவு பொலிவுமுகம்
  அத்தனையும் அவளிழந்து
  அயர்ந்திப்போ திருக்கின்றாள்
  அவள்கோலம் தனைநினத்து
   அலமந்து நானிருக்கிறேன் !
  நான்ழுதால் தானழுவாள்
  நான்சிரித்தால் தான்சிரிப்பாள்
  தேனாகப் பேசியவள்
  திக்திக்கிப் பேசுகிறாள்
  மான்விழிகள் கொண்டஅவள்
  மயக்கமுடன் விழிக்கின்றாள்
  மயக்கம்தந்த மங்கையிப்போது
  தயக்கமுடன் தவிக்கின்றாள் !
  என்றாலும் அவளிடத்தில்
  என்னின்பம் தெரிகிறது
  தன்தோளில் எனையணைத்துத்
  தான்வருடி நிற்கின்றாள்
  நான்வீழ்ந்து போகாமல்
  தான்வேராய் தாங்குகிறாள்
  என்னுயிரைத் தன்னுயிராய்
  எண்ணுகின்ற என்தலைவி !
  கூன்விழுந்து விட்டாலும்
  நான்விழுந்து போகாமல்
  தானெழுந்து எனைத்தாங்கி
   தாயெனவே நிற்கின்றாள்
   என்காதல் வாழ்வினிலே
   இப்போதே இனிக்கிறது
   என்வாழ்வில் இன்பவுலா
   இனித்தொடங்கப் போகிறது !
– மெல்பேண் செயராமர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue