அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

Prof.Rajam01
(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி)

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

(ஏன் படிக்க வேண்டும்?)


முன்சொல்
   16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு. அது   போர்த்துக்கீசிய மொழியில் தமிழை விளக்கி எழுதப்பட்டது. அதை இயேன் அம்மையாரும் (Jeanne Hein) நானுமாகச் (V.S.Rajam) சேர்ந்து மொழிபெயர்த்து இப்போது வெளியிட்டிருக்கிறோம். இது தொடர்பாக இயேன் அம்மையாரின் வேலை தொடங்கியது 1964-இல். பிறகு 1978-இல் என்னோடு  சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலை தொடர்ந்தது. மொழிபெயர்ப்பு வேலை முடிந்தது 1982-இல். ஆனால் முழுப் புத்தகமாக வெளியிட உடனே இயலவில்லை, பல பல சிக்கல்கள். சிக்கல்களை முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.

பாதிரியாரின் கையேட்டை ஏன் படிக்க வேண்டும்?
ஒரு சில கருத்துகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

  1. அன்றீக்குப் பாதிரியார் இந்தத் தமிழ்க் கையேட்டை உருவாக்கிய காலச் சூழ்நிலையைத் தெரிந்து கொள்ளலாம். அது தமிழக வரலாற்றில் ஒருகுத்துக்கல்.

  1. தொல்காப்பியம், நன்னூல் போன்றமரபிலக்கணங்களைத் தொடாமல் இலத்தீன் இலக்கணக்கூறுகளின் வழியே தமிழை விளக்கியிருப்பது முதல் முதலாக நமக்குத் தெரியவரும் புது முயற்சி. இந்த முயற்சியே பின்வந்த “அயலவர் படைத்த” தமிழ் இலக்கணங்களுக்கு முன்னோடி.

  1. வடமொழிச் சார்பு மிகுதியும் இல்லாத தமிழை இந்தக் கையேடு விளக்குகிறது. மிகச் சில வடமொழிச் சொற்களே இந்தக் கையேட்டில் உள்ளன.

  1. 16-ஆம் நூற்றாண்டில், தமிழக முத்துக்குளித்துறையில்தமிழ் எப்படி எழுதப்பட்டது, தமிழ்ச் சொற்கள் எவ்வாறு ஒலிக்கப்பட்டனஎன்று இந்தக் கையேட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

  1. சில தமிழ் ஒலிகளின் வழி, 16-ஆம் நூற்றாண்டுப்போர்த்துக்கீசியம் எவ்வாறு ஒலிக்கப்பட்டதுஎன்றும் தெரிகிறது என்று இயேன் அம்மையார் சொன்னார்கள்.

  1. 16-ஆம் நூற்றாண்டில் தமிழக முத்துக்குளித்துறையில் வாழ்ந்த மக்களைக் குறிப்பிடும் பெயர்ச் சொற்களை (இயற்பெயர் அல்லாத ‘கொல்லன்’ ‘தட்டான்’ ‘நாசுவன்’ … போன்ற பெயர்ச் சொற்களை) அன்றீக்கு அடிகளார் வகைப்படுத்தியிருக்கும் முறையிலிருந்து … சாதி” “இனம்” “தொழில்” அடிப்படையில் அப்போது வழங்கிய பெயர்களை அயலவர்கள் எப்படிப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள் என்று தெரிகிறது. இதை எங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சாதி” என்ற தமிழ்ச்சொல்லை “caste” என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அந்தச் சொல்லுக்கு அடிப்படை போர்த்துக்கீசியச் சொல்லான “casta” என்பது இங்கே தெரிகிறது. மேற்குக் கடல் வழியே முதல் அயலவர் வந்த இடம் தென்னாடு; அவர்களுடைய சமயத்தைப்  பரப்புவதற்காக வாழ்ந்து பழகிய இடம் தமிழகம். அங்கே அவர்கள் பார்த்துப் பழகிய மக்களை அவர்கள் வகைப்படுத்தியபோதுதானே இந்த “casta” என்ற கருத்து உருவாகியிருக்க வேண்டும்?

  1. கிறித்துவத் தமிழ்” என்ற ஒரு வகைத் தமிழ் உருவாகி வந்ததைப் புரிந்துகொள்ளலாம்.

இன்ன பிற.
- முனைவர் இராசம் இராமமூர்த்தி


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue