பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

sparrow78
(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி)
காட்சி – 23
அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்      :     மரக்கிளை
நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி
செல்லப்பேடு வினவுது இங்கே)
ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்?
என்னவோ நாட்டில் நடந்ததுபோல்!
பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென
கற்றோர் பலரோ சொல்கின்றார்!
ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற
திங்களன்றோ? இத்திங்கள்!
பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை!
அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு!
ஆண்   :  சொன்னாயே! நன்றாய்! இதுவென்ன!
தன்னாலே வருகின்ற சிறு காற்றா?
பெண்   :  பிள்ளை பிறந்த சில திங்கள்களில்
அரசே ஏற்று அப்பிள்ளையை
எல்லாமே செய்வதாய் சிலரிங்கு
சொல்கின்றாரே அது என்ன?
ஆண்   :  சொல்வது உண்மை: அது எதுவோ
வெளிநாடு இதனைச் செய்கின்றதாம்!
பள்ளியில் சேர்க்கவே பெற்றோர்கள்
சொல்லணும் முதலில் சாதியை இங்கு
சாதி மதமென்ற காலத்தை
நீதியாய் முதலில் நிறைவியே
மீதியை நிறைவி முடித்தால்தான்
முதன்மையர் பள்ளியில் சேர்த்திடுவார்!
பெண்   :  நிறைவாது போனால்! என் செய்வார்?
ஆண்   :  கரத்தால் இடம் இல்லை என்றிடுவார்
பெண்   :  பணி தேடித்தருகின்ற அரசாங்கத்
தனியிடம் சென்றாலும் இதுதானோ?
ஆண்   :  பணியது தருதோ! இல்லையோ
துணிவோடு சாதியைக் கேட்டுவிடும்!
அங்கும் நீ சாதியைக் குறிப்பிடணும்
பொங்கி நீ மறுத்தால்! வந்திடணும்
பெண்   :  சாதிமதமற்ற நாடென்று! வான
வீதியில் உலாவியே உரைக்கின்றார்!
ஆண்   :  குடிக்கவும் அனுமதி கொடுத்திடுவார் – குடி
குடிக்காதே எனவும் அறிவிப்பார்!
புகைக்கும் பொருளையும் அனுமதிப்பார்
புகைக்காதே எனவும் குறித்திடுவார்!
என்ன விந்தை! விந்தையிது! வெளியே
சொன்னால் வெட்கக் கேடேதான்!
பெண்   :  என்ன! செய்யலாம்? இதற்குத்தான்!
உனக்குத் தெரிந்தால் உரைத்துவிடு!
ஆண்   :  எனக்கென்ன தெரியும்? சிலரிங்கு
கணக்கிட்டு உரைக்க நானுரைத்தேன்!
பெண்   :  என்னமுடிவாய் உரைத்தார்கள்?
சொன்னால் கொஞ்சம் நலமுண்டு!
ஆண்   :  கல்வி பயிலும் கூடத்திலும்
வேலைக்குப் பதியும் நிலையத்திலும்
துளியும் சாதிப்பெயரே இல்லாது
வெளியே தூக்கி எறிந்திட வேண்டும்!
பெண்   :  சாதியால் சலுகை பெறுவோர்
வேதனை அடைவாரன்றோ?

ஆண்   : வாழ்வு அனைவருக்கும் பொதுவாய் இருக்க
கீழ்சாதி என ஏன் பிரித்தே வைத்து
சலுகைகள் எனவோர் முத்திரையிட்டு
சுளுவாய் இனங்காண வைத்திட வேண்டும்!
எந்தச் சாதியில் வறுமையில்லை ‡ பெற
எந்தச் சாதிக்கு உரிமையில்லை
பொருளாதார வகையினில் பிரித்து
உரிமைகள் அனைத்தும் அனைவருக்கும் வழங்க
சலுகைகள் முடிந்த அளவிலே செய்து
பளுவைக் குறைத்தலே! நலமாம்!
சலுகை சாதி வளர்ப்பேயின்றி
அழிக்கும் தீயின் ஒளியுமாகா!
பெண்   :  என்னவோ உனது கருத்தைப் பார்த்தால்!
கண்முன் தெரியும் காட்சிபோல் இருக்கு!
ஆண் :   எனக்கென்ன தெரியும்? என் கருத்தன்று!!
சொன்னதெல்லாம்? அறிந்தோர் தானே!
பெண்   :  சரி! சரி! காட்சி தொடங்கியுமாச்சி!
சிறிதே கொஞ்சம் அதனைக்காண்போம்!

(காட்சி முடிவு)

(பாடும்)

– ஆ.வெ.முல்லை நிலவழகன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue