இந்த வாரம்: கலாரசிகன்
தினமணி


ரசனை உள்ளவர்கள்தான் கவிஞர்களாக முடியும். நல்ல கவிஞர்கள் நல்ல ஓவியர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஓவியத் திறமை பெற்ற கவிஞர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் கவிஞர் பெருமாள் ராசுவுக்குத் தனியிடம் நிச்சயமாக உண்டு. அவரது "பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பு ஓர் அற்புதமான படைப்பு என்பது மட்டுமல்ல, அரிய முயற்சியும் கூட. திருவேங்கடத்தில் தொடங்கி இந்தியாவிலுள்ள 150 திருத்தலங்களைச் சுற்றிவந்து 151-வதாகக் குமரிமுனை வரை உள்ள ஆலயங்களை அவர் தரிசித்தது மட்டுமன்றி, தனது தூரிகையில் தீட்டி மகிழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் ஓர் அற்புதமான கவிதையும் எழுதி, பாண்டுரங்க தேவனுக்குப் பாமாலை சார்த்தி மகிழ்ந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் கோயிலும் சரி, கேதார்நாத் ஜோதிர்லிங்கங்களும் சரி, கவிஞர் பெருமாள் ராசுவின் தூரிகையில் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள், ஜோதிர்லிங்கம் என்று கவிஞரின் காலடி தீர்த்தாடனக் காவடி எடுத்திருக்கிறது. அவரது ஓவியத்தில் மயங்குவதா, கவிதைகளின் பக்தி ரசத்தில் மூழ்கித் திளைப்பதா என்று தெரியாமல் தத்தளிக்க வைத்திருக்கிறார் கவிஞர் பெருமாள் ராசு. இந்தப் பிரணவப் பிரவாகத்தில் காணும் புனிதக் கோயில்களும் பிற ஓவியங்களும் அப்பொழுதுக்கப்பொழுது வரைந்த அரிய அனுபவங்களே. நமது புனித மண்ணில் உள்ள ஆயிரமாயிரம் கோயில்களில் இதில் காண்பவை சிலவே. மேலும் உள்ளவற்றை தரிசிக்க இவை தூண்டலாம். இதில் காணும் எண்ணத் துகள்களும் அவற்றில் உள்ள 151 திருநாமங்களும் புதியன அல்ல. ஆனால் புதிய பரிமாணங்களில் உலகைக் காண உதவும். கவிஞர் பெருமாள் ராசுவின் மனது பேசியிருக்கிறது. அடடா! "இக்கவிதைகள் இறைவனை உணர உதவும் முகவரிகளே... இந்த முகவரிகளே இறைவன் அல்ல...' என்று அவர் கூறியிருப்பதை ஆமோதிப்பன அவர் கவித்துவமும் ஓவியத்திறமையும். பிரணவப் பிரவாகத்தில் முதல் கவிதை திருமலை திருப்பதியில் தொடங்குகிறது.""உலகாகி உலகத்தின் உயிராகி உணர்வாகி உயர்வாகி நின்ற உயர்வேபலவான பொருளாகிப் பகலாகி இரவாகி பண்பாகி நின்ற பண்பேகுலவுநல் குணமாகி அருளாகி அறிவாகி குருவாகி நின்ற குருவேநலமான உன்பாதக் கமலத்தில் எமைஏற்று அருள்பாண்டு ரங்க தேவா''*******பழைய புத்தகக் கடைகள் என்னைப் பொருத்தவரை அறிய பொக்கிஷங்கள். பெரிய பெரிய நூலகங்களில் நமது கண்களில் அகப்படாத பல புத்தகங்கள் பழைய பேப்பர் கடைகளில் எடைக்கு விலை பேசப்படும் அவலம் மனதை வேதனைப் படுத்துவது என்னவோ நிஜம். அதே நேரத்தில் ஏதோ ஒரு முட்டாள் அரிய பொக்கிஷத்தை அனாதையாகத் தூக்கி எறிய, அது நம்மிடம் கிடைத்துவிடுகிறதே என்கிற மகிழ்ச்சியும் நிஜம். இப்படித்தான் சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் ஒரு பழைய பேப்பர் கடையில் பொழுது போகாமல் அங்கிருந்த குப்பைகளிடையே ஏதாவது மாணிக்கம் கிடைக்காதா என்று சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தேன். தெருத்தெருவாக அலைந்து பழைய பேப்பர் வாங்கும் இளைஞன் அன்றைய குப்பையைக் கொண்டுவந்து கொட்டினான். அந்தப் பழைய பேப்பர்களுக்கு நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் "இலக்கிய மலர் 2007' என்னை காந்தமாக இழுத்தது. புத்தகம் தான் பழையது; அதில் இருக்கும் சில விஷயங்கள் இன்றைக்கும் புதியது. அம்பாசமுத்திரம் இரா.நவமணியும் மணப்பாறை ஆ.தமிழ்மணியும் "நாத்திகனும் வியக்கும் ஆத்திகம்' என்று தாயை வர்ணிக்கும் சென்னையைச் சேர்ந்த கவிஞர் சுராவும் தங்களது பங்களிப்பை இந்த மலருக்குத் தந்திருப்பது வியப்பை அதிகப்படுத்தியது. கோதையூர் மணியனை ஆசிரியராகக் கொண்டு செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிர்வாகக் குழுவினரின் உழைப்பும் ஆர்வமும் பக்கத்துக்கு பக்கம் பளிச்சிடுகிறது. ஆமாம், யார் இந்த கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சூசன்? "செருப்பு' என்ற தலைப்பில் இந்த மலரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். 2007-க்கான சிறந்த சிறுகதைக்கான பரிசை இலக்கியச் சிந்தனைக்காரர்கள் இந்தக் கதைக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தும் சூசனின் சிறுகதை எனது மனதை விட்டு அகல மறுக்கிறது. கோயில் வாசலில் உள்ள செருப்புக் கடையில் வேலை பார்ப்பவர்களின் மனநிலையும் அவர்களுக்கு இருக்கும் தொழில் ஆர்வமும், தனித்துவமும் திறமையும் எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும் என்கிற உண்மையை என்னமாய் படம் படித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் சூசன். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்ட வேண்டும் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட அற்புதமான சிறுகதை எழுத்தாளர்களை இருபது ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் கண்டு ஊக்குவித்த வார இதழ்கள் இப்போது சிறுகதைகளுக்கான இடத்தைச் சுருக்கிக் கொண்டுவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அவலம், நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகள் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன. நல்லதொரு சிறுகதையைப் படித்த திருப்தி. சூசனுக்குப் பாராட்டுகள். பழைய பேப்பர் வாங்கும் இளைஞனுக்கு நன்றி!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue