Skip to main content

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்

 




(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்-தொடர்ச்சி)

பூம்புகார் எனும் தொடர் அழகிய புகார் நகரம் எனப் பொருள்படும். புகார் எனும் பெயர், பொதுவாகத் துறைமுக நகரங்களைக் குறிக்கும் என்றாலும், அது சிறப்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தை மட்டுமே குறிக்க வழங்கும். புகார் எனும் பெயர், அது கடற்கரையைச் சேர்ந்த ஒரு நகரம் என்பதை மட்டுமே உணர்த்தும். காவிரிப்பூம்பட்டிளம் எனும் அதன் பிறிதொரு பெயர், அஃது இருந்த இடம் இஃது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும். பட்டினம் எனும் பெயர், புகார் என்பதை போன்றே, கடற்கரை ஊர்களை’ உணர்த்தும் பொதுப்பெயராம்; நாகப்பட்டினம் காயல்பட்டினம், அதிராம் பட்டினம் என்ற பெயர்களை நோக்குக; அப்பெயரின் முன் இணையாக வந்துள்ள காவிரிப்பூம் என்ற தொடர், ஈண்டுக் குறிப்பிடும் பட்டினம், காவிரிக் கரையில் அமைந்துள்ள, அழகிய நகராகும் என்பதையும் உணர்த்தும்; ஆகவே, காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த அழகிய நகரே, காவிரிப்பூம்பட்டினம் என்பதை, அத்தொடர் தெளிவாக உணர்த்தியவாறு உணர்க,

இமயம் முதல் குமரி வரையுள்ள நாவலந்தீவின் காவற் கடவுளாகிய சம்பாபதி என்பவள், புகார் நகரில் தங்கித் தன் தொழிலாற்றியிருந்தனளாதலின், அப்புகார், பண்டு சம்பாபதி எனும் பெயர் பூண்டிருந்தது. அஃது, அந்நகரை அடுத்துக் காவிரியாறு பாயத் தொடங்கியகாலம் தொட்டுக் காவிரிப்பூம்பட்டினம் எனும் பெயர் பெற்றது.1

  1. பரசுராமன் சினத்திற்கு ஆளாகாமல் தப்பிப் பிழைத்த, ஒரே அரசனாகிய ககந்தன் என்பவன் ஒரு காலத்தில், புகார் நகரில் இருந்து அரசாண்டானாதலின், அந் நகர்க்குக் காகந்தி என்ற மற்றொரு பெயரும் உண்டு.2

2 மேலைநாட்டு வணிக மக்களும், உலகை வலம் வந்த பெரியார்களும், காவிரிப்பூம்பட்டினத்தைக், கி.பி. முதல் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். கி.பி. 81-96ல் எழுதப்பெற்ற “பெரிபுளூஸ் மாரிஸ் எரித்ரியா” நூலில் கொற்கைத் துறைக்கு வடக்கில், ‘கடற்கரை நாடு’ என்ற கடலைச்சார்ந்த நாடு ஒன்றும், ‘அர்கரு’ என்ற உள்நாடு ஒன்றும் இருந்தனவாகக் கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும், முறையே, கடற்கரை ஊராகிய புகாரையும், உள்நாட்டு ஊராகிய உறையூரையும் தலைநகர்களாகக் கொண்டு விளங்கிய இரு சோழ அரசுகளையே குறிப்பனவாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தாலமி என்ற நில நூல் பேராசிரியர், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் “கபெரீஸ்” எனும் ஓர் ஊர் உளது எனக் கூறியுள்ளார்; அவர் கூறிய ஊர் புகாரே என்பதில் சிறிதும் ஐயமில்லை. கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட, “மிலிந்தா அரசனுடைய கேள்விகள்” என்ற பெளத்த நூல், “கடற்கரை நகரங்களுள் சிறந்தது கோளப்பட்டினம்” என்று கூறுகிறது. அது கூறும் கோளப்பட்டினம், சோழர் கடற்கரை நகராகிய புகார் நகரேயாம் எனக் கூறவும் வேண்டுமோ?

புகார், பழமையும் பெருமையும் மிக்க ஒரு மாநகர்: அது, இமயத்தோடும், பொதியத்தோடும் தோன்றிய பழமை வாய்ந்தது; தன்னை என்றும் பிரியாது, தன்னகத்தே வழி வழி வாழ்ந்த பழம்பெரும் குடிகளைக்கொண்டது; வேந்தனும்விழையும் பெருவளம் மிக்க வணிக மக்களின் வாழ் விடமாயது. வறுமையால் வாடித் தன்னை வந்தடையும் உலக மக்கள் அனைவர்க்கும் வழங்கினும் வற்றாப் பெருவளம் உடையது. இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களைப் பெற்றது.

‘இவ்வாறு ஒரு நல்ல நகருக்கு உரிய சிறப்புக்களில் ஒன்றையும்விடாது, அனைத்தையும் தனக்கே உரியவாகப் பெற்ற புகார் நகரின் அருமை பெருமை அறிந்த பெரியோர்கள், “புகார், பழம் பெருங்காலத்தே தோன்றிப் பாரெலாம் போற்றி வாழ்கிறது.” என வாயாரப்பாராட்டுவரேயல்லால், “அது ஒரு காலத்தே பாழாம் எனக் கூறார்” எனப்பாடிப் பாராட்டியுள்ளார் சிலம்பு அளித்த சேரர்குல் இளங்கோ.3

காவிரியின் வடகரையில் விளங்கிய புகார், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இருகூறாப் பிரிந்திருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த பகுதி மருவூர்ப்பாக்கம். அதற்கு, மேற்கில் இருந்தது பட்டினப்பாக்கம்; முன்னதைப் புகாரின் புறநகராகவும், பின்னதை இதன் அகநகராகவும் கொள்ளின் பொருந்தும். வாணிகம் புரிந்து பொருள் ஈட்டி வாழும் மத்திய வகுப்பாரும், மெய்வருந்தும் தொழில் புரிந்து வயிறு வளர்க்கும் பிற்பட்ட வகுப்பாரும் குற்றேவல் புரியும். தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வாழும் இடம் மருவூர்ப் பாக்கம்: அரசனும், அமைச்சர் முதலாம் அரசியல் துணை வரும், மன்னனும் மதிக்கத்தக்க மாநிதிச் செல்வரும் ஆகிய உயர் வகுப்பார் வாழும் இடம் பட்டினம்பாக்கம்.4

மருவூர்ப் பாக்கத்துத் துறைமுகம், பாய்மரக் கம்பத்தில் நாட்டிய தத்தம் நாட்டுக் கொடிகள் காற்றில் அசைய, கட்டிய கட்டுத்தறிகளும் நிலை குலைந்து போமாறு ஒயாது ஆடிக்கொண்டேயிருக்கும் களிறுகள்போல், அலைகளால் அலைப்புண்டு நிற்கும் நாவாய்களால் நிறைந்திருக்கும்.5 கரையில் கடலை ஒட்டினாற்போல், வானுலகைத் தாங்கும் கம்பம்போல், ஏணிக் கெட்டா உயர்வுடையவாய்க் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப் பெற்று கூரையிட்டு வேயாத மாடத்தின் மீது, கலங்கரை விளக்குப் பொறுத்தப் பெற்றிருக்கும்; கடல் கடந்த நாடுகளிலிருந்து, கலங்கள் வழியாக வந்து இறங்கிய பண்டங்களும், கலங்களில் ஏற்றி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று வணிகம் புரிய வந்து குவிந்த பண்டங்களும், வரிசை வரிசையாக வகைப்படுத்தி வைத்திருக்கும் பண்டசாலைகள், கலங்கரை விளக்க வேயா மாடத்தை அடுத்துக் கட்டப்பெற்றிருக்கும். பண்டசாலைகளுக்குப் பக்கத்தில் ஆயத்துறைகள் அமைந்திருக்கும். மான்கண் போலும், அழகிய சிறு சிறு கோணங்களைக் கொண்ட சாளரங்கள் வைத்துக் கட்டிய மாளிகைகளில் வாழும் அவ்வாயத்துறை அலுவலாளர். ஆங்குக் குவிந்து கிடக்கும் பண்டப் பொதிகளுக்கு உரிய சுங்கங்களைத் தண்டியும், சங்கம் இறுத்த பொதிகள் மீது, தம் அரசர்க்குரிய புலி இலச்சினையைப் பொறித்தும், புலி இலச்சினை பொறித்த பொதிகளை, ஆயத்துறைகளை அடுத்திருக்கும் உயர்ந்த மேடைகள் மீது போர் போல் குவித்து வைத்தும், இரவு பகல் ஓயாமல் பணியாற்றிக் கிடப்பர்.6

துறைமுகத்தைக் கடந்து, கரைநோக்கிச் சிறிது தூரம் சென்றால், ஆங்கே கடல் வாணிகத்தால் வளம் மிகுந்து செல்லும் விருப்பம் உடையராய் வந்து வாழும் வெளிநாட்டு வணிக மக்களின் வாழிடத்தைக் காணலாம். ஆங்கு வாழ்வார். ஒரே நாட்டிலிருந்து வாராது, வேறு பல நாடுகளிலிருந்து வந்தவரேயாயினும், ஒரு நாட்டு மக்கள் போல் உள்ளம் கலந்து வாழ்வர். நம் நாட்டு மக்களால், யவனர் என அழைக்கப்பெறும், அவ்வெளிநாட்டு மக்களின் வாழிடம், வளம் பல நிறைந்தது. அவ்வளத்தை ஒரு முறை கண்டார், அவ்விடத்தை விடுத்து வேறிடம் செல்ல விரும்பார், அத்துணை வளம் மிக்கது, அவ்வெளிநாட்டார் வாழிடம்.7 யவனர் வாழிடத்தை விடுத்து, அகநகர் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தால் பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆடைகள் நெய்து அளிக்கும் நெசவாளரும் நெல் முதலாம் உணவுப் பொருள்களைக் குவியல் குவியல்களாகக் கொட்டிவிற்கும் கூல வணிகரும், பிட்டு, அப்பம், மது, மீன், வெள்ளுப்பு: வெற்றிலை, இறைச்சி ஆகிய பொருள்களில் வாணிகம் புரிவோரும், கருங்கைக் கொல்லர், வெண்கலக் கன்னார், செம்பு செய்குநர், பொன்செய் கொல்லர், மட்கலம் வனைவார், மரத்தொழில் புரிவார், ஓவியக்காரர், தையல் தொழிலாளர் முதலாய பல்வகைத் தொழிலாளரும், பாணர், குழலர் முதலாம் இசையாளரும், குற்றேவல் புரிவோரும் வாழும் வீதிகளை வரிசையாகக் காணலாம்.8

மேலே கூறிய வீதிகள், இருபக்கத்திலும் வரிசை வரிசையாகப் பிரிந்து கிடக்க, இடையே நீண்ட பெருவீதியொன்று, அகநகரையும், ஆயத்துறையையும் இணைத்துச் செல்லும். நாவாய்கள் கொண்டு வந்து தந்தனவற்றை, நகரின் நடுவே அமைந்திருக்கும் நாளங்காடிக்குக் கொண்டு வரவும், நாவாய்க்கு ஏற்றவேண்டுவனவற்றை, அந்நாளங்காடியிலிருந்து கொண்டு செல்லவும் அப்பெரிய வீதி பயன்பட்டது.9

போக்குவரவு மிக்க அவ்வீதியில், மக்கள்.மண்டிக் கிடப்பர் ஆதலின், அவ்வீதியில், வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி, நறுமணச் சந்தனம், மலர், மணம் நாறும் புகைதரு பொருள்கள் போலும், நாகரீக நம்பியரும், நங்கையரும் விரும்பி வாங்கும் பொருள்களை விற்கும் சிறு வணிகர் கூட்டம் திரிந்து திரிந்து வாணிகம் புரியும்.10

மருவூர்ப்பாக்கத்தை விட்டால் வருவது நாளங்காடி; எதிர் எதிராக நிற்கும் இரு படைவீரர்களும் ஒன்று கலந்து போரிடும் இடை நிலம் போல, மருவூர்ப் பாக்கத்து மக்களும்  பட்டினப் பாக்கத்து மக்களும் வந்து, தத்தமக்கு வேண்டும் பொருள்களை வாங்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் வண்ணம், நாளங்காடி இருபகுதிக்கும் இடையே அமைந்திருந்தது; மரங்கள் நெருங்க வளர்ந்த ஒரு பெரிய தோப்பினிடையே அமைந்த அந்நாளங்காடியில், கடைகல், அம்மரங்களையே தூண்களாகக் கொண்டு, கட்டபெற்றிருக்கும். பொருள்களை வாங்குவோரும்; விற்போரும் எழுப்பும் பேரொலி, அங்கு எக்காலத்தும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.11

கடை விதிகளில், கடல் கடந்த நாடுகளியிருந்து கலங்கள் ஏற்றிக் கொணர்ந்த விரைந்து ஓடவல்ல குதிரைகளும், கரிய மிளகுப் பொதிகளும். வடநாட்டு மலைபடு பொருள்களாய பொன்னும் மணியும், பொதிய மலையில் விளையும். அகிலும் ஆரமும், பாண்டி நாட்டுக் கடலில் மூழ்கி எடுத்த முத்தும் சோணாட்டுக் கடலில் கிடைக்கும் பவளமும், கங்கைச் சமவெளியினின்றும் வந்த யானை முதலாயனவும் காவிரியாற்றுப் பாய்ச்சலால் விளையும் பல்வகைப் பொருளும், ஈழநாட்டினின்றும் வந்த உணவுப் பொருளும், பர்மா என வழங்கும் கடாரத்தினின்றும் வந்த கணக்கற்ற பொருளும், அளவு அறியமாட்டாமல் நிறைந்து வளம் மிகுந்து கிடக்கும்.12

(தொடரும்)

1. சம்பு என்பாள் சம்பாபதியினள்

செங்கதிர்ச் செல்வன்,திருக்குளம் விளக்கும்

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட

அமர முனிவன் அகத்தியன் தனாது

காகம் கவிழ்த்த காவிரிப்பாவை …..

என் பெயர்ப்படுத்த இவ்விரும்பெயர் மூதூர்

நின்பெயர்ப்படுத்தேன் நீவாழிய என”

-மணிமேகலை : பதிகம்:8-31

2. “சுகந்தன் காத்தல் காகந்தி என்றே

இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு”

-மணி :22: 37-38.

3. “பொதியிலாயினும், இமயமாயினும்,

பதியெழுவு அறியாப் பழங்குடி கெழீஇய”

– சிலம்பு; 1 : 14-194. “பொதுவறு சிறப்பின் புகாரே ஆயினும்

நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை

ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்,

முடிந்த கேள்வி முழுதுணர்ந்தோரே”

-சிலம்பு : 1:16-19

“உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்

பரதர்மலிந்த பயங்கெழு மாநகர்,

முழுங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்தது”

-சிலம்பு : 2 : 1-4

5. “வெளில் இளக்கும் களிறுபோலத்

தீம்புகார்த் திரை முன்துறைத்

தூங்கு நாவாய் துவன்றிருக்கை

மிசைக்கூம்பின் அசைக்கொடி”

-பட்டினப்பாலை:172–175

6. வேயாமாடமும், வியன்கல இருக்கையும்,

மான்கண் காலதர் மாளிகை இடங்களும்”

-சிலம்பு 5:7-8

“நல் இறைவன் பொருள் காக்கும்

தொல் இசைத் தொழில் மாக்கள்…

வைகல்தொறும் ஆசைவு இன்றி

உல்குசெய . . . . . . . . . ..

நீரினின்று நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர் பரப்பவும்

அளந் தறியாப் பல பண்டம்

வரம் பறியாமை வந்தீண்டி

அருங்கடிப் பெருங் காப்பின்வலியுடைவல் அணங்கின் நோன்

புலி பொறித்துப் புறம் போக்கி

மதி நிறைந்த மலி பண்டம்

பொதி மூடைப் போர்”

–பட்டினப்பாலை 120-137

7. “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்

பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்

கலம்தரு திருவின் புலம் பெயர் மாக்கள்

கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”

-சிலம்பு 5:9.12

8. -சிலம்பு ; 5:16-39

9. மகர வாரி வளம் தந்து ஓங்கிய

நகரவீதி”

-சிலம்பு 6:128-129

10. “வண்ணமும் சுண்ணமும் தன் நறும் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர் வளர் திரிதரும் நகரவீதி”

-சிலம்பு 5:43-15

11. “இரு பெரு வேந்தர் முனையிடம் போல

இருபாற் பகுதியின் இடைநிலமாகிய

கடைகால் யாத்த மிடைமரச் சோலை

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்

நடுக்கின்றி நிலை இய நாளங்காடி”

-சிலம்பு 5:59-6312.

12.

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்

காலின்வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,

கங்கை வாரியும், காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளம் தலை மயங்கிய தினந்தலை மறுகு”

-பட்டினப்பாலை 185-193

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்