Skip to main content

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20



(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு – தொடர்ச்சி)

நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள், “பொதுத் தொண்டா? பொதுத் தொண்டா” என்று இரண்டுமுறை சொல்லி, “அது மிகவும் கடினமாயிற்றே? இவரால் அது எப்படிச் செய்யமுடிகிறது?” என்று வியப்புடனே கேட்டார்.

அப்போது அவர் கேள்வியின் கருத்து எனக்கொன்றும் விளங்கவில்லை. சர். வி. ஐயா அவர்கள் உடனே விளக்கத் தொடங்கினார் :

நான் அரசாங்க வேலையாக மேட்டூருக்குச் சென்றிருந்த சமயம் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஐந்து கல் தூரத்தில் நண்பர் வீட்டுத் திருமணம். அதற்கும் செல்லவேண்டியிருந்தது. ஓட்டுநர் அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினார். எனக்கு உடல் எல்லாம் நடுங்கிவிட்டது. ஏனெனில், நான் சென்றது அரசாங்க வண்டி. அதை எப்படி என் சொந்த, வேலைக்குப் பயன்படுத்தலாம்?

“ஆகவே ஓட்டுநரைக் கோபித்து, வண்டியைத் திருப்பி 20 கல் தூரம் உள்ளே என் இருப்பிடத்திற்கு வந்து, பின்பு என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு திருமணத்திற்குச் சென்று வந்தேன். அதுதான் என் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது” என்று கூறினார். இன்னொன்று.

“நான் வேலை பார்க்கும் காலத்தில் எனது மேசையில் 2 பேனாக்கள் இருக்கும் அரசாங்க வேலைகளுக்கு தனிப் பேனாவும், என் சொந்த வேலைகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கு வரையும் கடிதங்களுக்கும் என் சொந்தப் பேனாவும் பயன்படுத்துவேன்’ என்று கூறி – என் பக்கம் திரும்பி, தாங்கள் வந்த செய்தி என்ன?” என்று கேட்டார்.

“நான் வந்த வேலை முடிந்துவிட்டது. பொதுத் தொண்டு செய்வது எப்படி? – என்ற பாடத்தை, இன்று முதல் முதலாகத் தங்களிடம் கற்றுக் கொண்டேன்” என்று கூறி, மகிழ்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டேன். இது என் பொதுவாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டது.

இதனைப் படிக்கிற உங்களுக்கும் இது பயன் பட்டால் நான் பெரிதும் மகிழ்வேன்.
————-

தைப்பூசத் திருவிழா! எல்லாக் கோவில்களில் இருந்தும் காவிரி ஆற்றுக்குச் சுவாமி புறப்பாடு உண்டு. திருச்சி, பூலோகநாதர் சுவாமி கோவிலிலிருந்தும் சுவாமி புறப்பட்டது. நானும் என் தமையனார் ஒருவரும், கொடியைச் சுருட்டி சுவாமி கூடவே தூக்கிக் கொண்டு சென்றோம். அன்று அதற்குக் கூலி அரையணா; இன்றைய மூன்று காசு. ஆற்றுக்குப் போய்த் திரும்பவும் கோயிலுக்குக் கொடியைக் கொண்டு வந்து சேர்த்தோம் அப்போது மாலை மணி ஏழு இருக்கும். எங்களுக்கு இன்னும் காசு தரவில்லை யாதலால் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்தச் சமயம், கோவிலில் எரியும் விளக்கு அணையும் நிலையிலிருப்பதைப் பார்த்த என் தமையன், சென்று அதைத் தூண்டிவிட்டார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தந்தை, அவரை ஓங்கி முதுகில் ஒர் அறை அறைந்தார், அடி பட்ட அண்ணன் விபரம் தெரியாமல் திடுக்கிட்டு விழித்தார்.

பக்கத்திலிருந்த ஒருவர், என் தந்தையிடம் – “பையனை ஏன் அடித்தீர்கள்?” அவன் விளக்கைத் தூண்டியது தவறா?” என்று கேட்டார்.

அதற்குத் தந்தை, “விளக்கைத் தூண்டியது குற்றமில்லை; அதைக் குச்சியால் அல்லவா தூண்ட வேண்டும், பிறகு அதையும் அந்த விளக்கிலேயே வைத்துவிட வேண்டும். இவன் விரலால் தூண்டிவிட்டுக் கையைத் தலையிலே தடவிக்கொண்டானே! அது கோவில் எண்ணெய் அல்லவா? ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றார்.

எங்களுக்கு அன்று இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையாக அமைந்தது.

இன்று? திருக்கோயில் சொத்துக்களையே தம் சொத்தாக நினைத்து வாழ்க்கையை நடத்துகிற அன்பர்களுக்கெல்லாம், இது பயன்படுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.
————

தலைத் தீபாவளிக்கு மகளையும் மாப்பிள்ளையையும் அழைக்கவந்த சம்பந்தியிடம். “உங்கள் மகளை மட்டும் இப்போது அழைத்துப் போங்கள். மாப்பிள்ளையைப் பிறகு அனுப்பிவைக்கிறோம்” என்றார் பையனின் தந்தை அவரும், தன் மகளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

பிறகு ஒருநாள். தந்தை தன் மகனை அழைத்து, “இப்போது நீ தலைத் தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு. சந்தோசமாகப் போய் வா. “பெரியவர்களைக் கண்டால் வணங்கு” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

அவனும் இது மறக்காமலிருக்க மார்பிலே குத்திக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டே போனான்.

வழியில், ஒரிடத்தில், நாட்டாண்மைக்காரர் ஒருவர் பஞ்சாயத்தில் விசாரணை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவனையும், இவன் பேச்சையும் கேட்டு, “என்னினும் பெரியவர் யாரடா? ‘என்னைக் கண்டு அஞ்சடா”’ என்று சொல்லவே,

தந்தை சொன்னதை மறந்து, இப்படியே சொல்லிக் கொண்டு போகும்போது, வழியில் திருடர்கள் கூட்டம் ஒன்று, அவர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சமயம், இவனைப் பார்த்துவிட்டார்கள். முதலில் பயந்த அவர்கள், பிறகு இவன் பேச்சைக் கேட்டுச் செம்மையாக உதைத்து, ‘“இதையும் கொண்டு வந்து வைத்து இன்னொன்றையும் கொள்ளையடிச்சு வரணும்”’ என்று அவர்கள் கூறினர்.

இப்போது, இதுவே அவனுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டே சென்றான். அந்த வழியில் ஒரு கிராமத் தலைவருக்கு இரட்டைக் குழந்தை. அதில் ஒன்று விசக் காய்ச்சலில் இறந்துவிடவே, அதைப் பாடையில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதையறியாத மாப்பிள்ளை, “இதையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, இன்னொன்றையும் கொண்டுபோகணும்” என்று சொல்வதைக் கேட்ட கிராமத் தலைவன் திகிலடைந்து, நன்றாக உதைக்கச் செய்து, “இன்னும் ‘விருத்தியாகணும்”’ என்று சொல்லச் செய்தான்.

இவனும் இப்படியே சொல்லிக்கொண்டு போக, அடுத்த ஊரில் மணப்பந்தல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அதை அணைக்க முயலும்போது, இவன் மட்டும், “இன்னும் விருத்தியாகணும்’ என்று கூறவே, அங்கிருந்தவர்கள் ‘“தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கச்”’ சொல்லாமல் இப்படிச் சொல்கிறானே என்று சொல்லி நன்றாக உதைத்து அனுப்பினார்கள்.

பிறகு அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு சென்றான். அங்கு ஒரிடத்தில் குயவன் தன் மகனுக்கு மண்ணைப் பிசைந்து சட்டி பானை செய்யப் பழகிக் கொண்டிருந்தான். இவன் அங்குப்போய். ‘தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கணும்’ என்று சொல்ல, குயவனும் இவனை நையப் புடைத்து ‘“அரைப் படி முக்கால் படி, ஒரு படி”’ என்று பானைகளை சுட்டிக் காண்பித்தான்.

மிகவும் வேதனையுடன் ஒரு வழியாக மாமனார் ஊர் வந்து சேர்ந்தான். அங்கே ஆற்றங்கரையில் வழவழ. வென்று மழித்த தலையுடன் நாலைந்து பேர் வரிசையாக அமர்ந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கவும், உடனே, இவனுக்குப் பானை நினைவு வந்துவிட்டது. உடனே, ஒரு வாழை மட்டையை எடுத்து, ஒவ்வொருவரை யும், இது அரைப்படி இது முக்கால்படி, இது முழுப்படி என்று தட்ட ஆரம்பித்தான்.

இதை எதிர்பாராத அவர்கள், அலறிப் புடைத்து எழுந்து, அவன் செயலைக் கண்டு இரங்கி, “அடேய்? ‘பெரியவர்களைக் கண்டால் வணங்க வேண்டும்”’ என்று கூறினர்.

அப்போதுதான், இவனுக்குத் தன் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டே மாமியார் வீடு போய்ச்சேர்ந்தான்.

மருமகனது பேச்சையும், அவனது உடம்பையும் கண்ட மாமனார்க்கு, அவனது “அறிவுக் கூர்மை” நன்கு விளங்கியது. பெரிதும் வருந்தினார்.
——————-

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்