என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2024 அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்-தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி பொதுவறு சிறப்பின் புகார் பூம்புகார் எனும் தொடர் அழகிய புகார் நகரம் எனப் பொருள்படும் . புகார் எனும் பெயர், பொதுவாகத் துறைமுக நகரங்களைக் குறிக்கும் என்றாலும், அது சிறப்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தை மட்டுமே குறிக்க வழங்கும். புகார் எனும் பெயர், அது கடற்கரையைச் சேர்ந்த ஒரு நகரம் என்பதை மட்டுமே உணர்த்தும். காவிரிப்பூம்பட்டிளம் எனும் அதன் பிறிதொரு பெயர், அஃது இருந்த இடம் இஃது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும். பட்டினம் எனும் பெயர், புகார் என்பதை போன்றே, கடற்கரை ஊர்களை’ உணர்த்தும் பொதுப்பெயராம்; நாகப்பட்டினம் காயல்பட்டினம், அதிராம் பட்டினம் என்ற பெயர்களை நோக்குக; அப்பெயரின் முன் இணையாக வந்துள்ள காவிரிப்பூம் என்ற தொடர், ஈண்டுக் குறிப்பிடும் பட்டினம், காவிரிக் கரையில் அமைந்துள்ள, அழகிய நகராகும் என்பதையும் உணர்த்தும்; ஆகவே, காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த அழகிய நகரே, காவிரிப்பூம்பட்டினம் என்பதை, அத்தொடர் தெளிவாக உண