Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி)

 தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும்

தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;
தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்
தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75
குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;
மரக்கிளை வாழும் மந்தியின் மானம்
நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!

மானம் பரவுதற் கானவை இயற்றுக;

 பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு,   80
 தணிவறு காதல் தாய்மனம் உருகிப்

பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,
அறியாக் குழவி அலறுதல் போல,
அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்
பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85
சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்
பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்
தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும்;
சேய்நலங் கருதிய தாய்,மருந் துணல்போல்
உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் 90
விலகா ததனை விழைந்திடல் வேண்டும்;


காணாப் புதுமை

 ஆய்பொற் றொடியே, அறிகதில் அம்ம!

தகுமிசை யரங்கில் தாய்மொழி விடுத்துப்
புகுமொழி இசைத்திடும் புன்மையை உலகில்

யாண்டுங் காண்கிலை ஈண்டுக் காண்குவை; 95

------------------------------------------------------- 
குரக்கினம் - குரங்கினம், குழவி - குழந்தை, தணிவறு - நீங்காத.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீண்டுந் தமிழிசை வேண்டும் எனினோ
மொழிவெறுப் புணர்ச்சி என்றதை மொழிகுவர்;
பழுதுறு மதியர் பான்மையஃ தன்றோ?
அகப்பகை தமிழை அழிப்பதைக் காணுதி!
செகுத்ததை ஒழித்துச் செந்தமிழ் பேணுதி! 100

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்