Skip to main content

நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்





நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்

ஆறு : aaru_river

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன்
கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்;
திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச்
சீப்புகள் மோதித் திறந்துவந்தேன்.
காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில்
கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்!
ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென்
ஆசை தீரவிளை யாடிவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய்
அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்;
நேயமுறுப் புன்செய்க் காட்டிலும்-அங்கங்கு
நீரை இறைத்து நெடுகவந்தேன்.
பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன்-சீனி
பாகமாய்ச் செய்து கொடு்த்துவந்தேன்;
நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்-குழாய்
நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன்.
மாங்கனி தேங்கனி வாரிவந்தேன்-நல்ல
வாச மலர்களும் அள்ளிவந்தேன்;
தீங்கரும் பாயிரம் தள்ளிவந்தேன்-மிகத்
தேனும் தினையுமே சேர்த்துவந்தேன்.
அல்லும் பகலும் அலைந்துவந்தேன்-எங்கள்
ஆழி இறைவனைக் காணவந்தேன்;
நில்லும் எனக்கினி நேரமில்லை-இன்னும்
நீண்ட வழிபோக வேண்டும் அம்மா!
kavimani-thesiyavinakam01
கவிமணி தேசிகவிநாயகம்(பிள்ளை)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue