கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி)
பூங்கொடி
சண்டிலியின் அழைப்பு
பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன்
பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன்
விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை
—————————————————————
தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான்.
++++++++++++++++++++++++++++++++++++
ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்
பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட 270
நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர்
ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின்
வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன்
அரிவைநீ அருளுடன் அந்நகர்க் கேகுதல்
புரிகுவை யாயின் பெரும்பயன் வரும்’எனப் 275
பரிவுடன் சண்டிலி பகர்ந்து வணங்கினள்;
வேங்கை நகரில் பூங்கொடி
சரியென இசைந்தெழு தன்னிகர் பூங்கொடி
அடிகள் திருவடி அன்பொடு வணங்கித்
துடியிடைச் சண்டிலி துணையொடு போந்தவள்
ஓங்ககல் நெடுந்தெரு வேங்கைமா நகருள் 280
நிலவொளி வீசும் நெடுநிலை மாடம்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
மாளிகை புகுந்து மகிழ்வுடன் தங்கி
மீளி மீனவன் மீட்டநற் சுவடியின்
துணையொடு தோன்றித் தொழுதவண் இருந்தே 285
இணையிலா வளத்தன் இளகிய மனத்தன்
பசிதின வருந்திய பைதன் மாக்கட்கு
நசையொடு பொருஞ்சோறு நல்குதல் என்ன
இசைபயில் பசியால் இரப்போர் தமக்கெலாம்
காரிகை உவந்த கனியிசை யமுதம் 290
வாரி வாரி வழங்கினள் பெரிதே 291
—————————————————————
ஓங்ககல் – நீண்டகன்ற, பகுவாய் – பெரியவாயில், மீளி – சிறந்தவன், பைதல் – வருத்தம்.
++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment