Skip to main content

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்

 




(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன் – தொடர்ச்சி)

தமிழர் வீரம்
அத்தியாயம் 8
பெண்ணை நாட்டுப் பெருவீரர்


மலையமான் நாடு
தமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம்1. வலிமை சான்ற முள்ளூர்க் கானம் அதன் கோட்டை.

காரியும் குதிரையும்
மலையமான் குலத்தில் தோன்றினான் காரி. அவன் நிகரற்ற குதிரை வீரன். அவன் குதிரைக்கும் காரி என்பது பெயர். அக் குதிரையின் திறமையால் பெரும் போர்களில் வெற்றி பெற்றான் காரி வீரன். அவன் உதவியை நாடினர் முடிமன்னர் மூவரும்.2 போர்க்களத்தை நோக்கி அவன் குதிரையின்மேற் செல்லும்போது மண் நடுங்கும்; மாற்றார் மனம் ஒடுங்கும்.

ஓரியும் காரியும்
கொல்லிமலை வீரனாகிய ஓரிக்கும், மலையமான் காரிக்கும் இடையே நாளடைவில் கடும்பகை மூண்டது; இறுதியில் போர் நிகழ்ந்தது.போர்க்களத்தில் ஓரியைக் கொன்றான் காரி; கொல்லிமலையைக் கைக் கொண்டான்; அதற்கு உரிமையுடைய சேரமானிடம் ஒப்புவித்தான். அன்று முதல் சேரமானும் மலையமானும் சிறந்த நண்பராயினர்.

உரிமை வேட்கை
வில்லாளருள் வல்லாளனாகிய ஓரியை முடித்த வீரன் என்று எல்லாரும் காரியைப் பாராட்டினார்கள். அப் புகழுரை கேட்டு மகிழ்ந்த காரி தன் நாட்டில் சுதந்திரத்தை நிலை நாட்ட விரும்பினான். அவன் முன்னோர் சோழ குல மன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்திருந்தனர். முடிசூடி அரசாளும் உரிமை அவர்க்கு இருந்ததில்லை. அந்த நிலையை மாற்ற ஆசைப்பட்டான் காரி. மலையமான் நாடு தன்னரசு பெற்ற தனி நாடாதல் வேண்டும் என்பது அவன் வேட்கை. சிற்றரசர்களில் சிலர் அவன் கருத்தை ஆதரித்தனர். திருக்கோவலோரில் முடிசூடி அரசாளத் துணிந்தான் அவ்வீரன்.

முடிசூட்டு விழா
முடிசூட்டு விழாவிற்குரிய வேலைகள் முறையாக நடந்தன. திருக்கோவலூர் புத்துயிர் பெற்றாற்போல் பொலிவுற்றது. வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீடுதோறும் மங்கல முழக்கம்; மாடம் எங்கும் மணிக் கொடிகள்; மேடை எங்கும் ஆடல் பாடல். பெண்ணை யாற்றங்கரையில் அழகுற அமைந்த அரண்மனை கண்ணுக்கு இனிய காட்சியளித்தது. இன்னிசையாளர் ஒரு பால்; நல்லிசை வீரர் ஒருபால்; குறுநில மன்னர் ஒருபால்; பெருநிலத் தலைவர் ஒருபால்; மயிலினம் போன்ற மங்கையர் ஒருபால். இவ்வாறு நல்லாரும் வல்லாரும் அணியணியாக அமர்ந்திருந்த மன்றத்தின் நடுவே நின்றது ஓர் அரியாசனம். அதன்மீது வீர சிங்கம்போல் வீற்றிருந்தான் மலையமான் காரி. மங்கல வாத்தியம் முழங்க, குலமாதர் குரவையிட, பாவலர் பல்லாண்டு பாட, குடிகளின் சார்பாகப் பெண்ணை நாட்டுப் பெரியார் ஒருவர் மலையமானுக்கு மணிமுடி சூட்டினார். அன்றுதொட்டு ‘மலையமான் திருமுடிக்காரி என்னும் சிறப்புப் பெயர் தாங்கி அவன் அரசு வீற்றிருந்தான்.

திருமுடிக்காரி
என்றும் வாடாத தமிழ்மாலை பெற்ற வள்ளல்களில் ஒருவன் திருமுடிக்காரி. பொய்யறியாக் கபிலர் அப்பெருந்தகையைப் புகழ்ந்து பாடினார். “கபிலர் பாடிய காரியை நாம் பாடுதல் எளிதோ” என்று கருத்தழிந்து நின்ற கவிஞர் பலர். அன்னவருள் ஒருவர் நப்பசலையார் என்னும் மெல்லியலார்.4
எனவே புலவர் பாடும் புகழுடையவன் திருமுடிக்காரி. பெண்ணை நாட்டுக்குப் பெருமையளித்தவன் திருமுடிக்காரி. வீர சுதந்திர வேட்கையின் சின்னமாக விளங்கியவன் திருமுடிக்காரி.5

வாணர்குல வீரம்


மகத நாடு

தமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.6

வாணர்குலப் பெருமை
தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். ‘சீர்த்தி’ யென்னும் பெயருடைய அந் நல்லாள் “மாவலி மருமான் சீர்கெழு திருமகள்” என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.


ஆறைக் கோட்டை
வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.7

பஞ்சநதி வாணன்
தமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன்8. அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் – தொண்டைமான் – பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ?

பாண்டிப் போர்


வாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்9.

பாணனுக்குப் பாண்டிநாடு
நெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனையும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, “அருந் தமிழ் விருந்து” என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, “உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்” என்றான்10. கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. “நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்” என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.

பாணனது நாணம்
சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, “அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா? பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க” என்று வாழ்த்தி நின்றான்.


பாண்டிப் போரில் வாணகோவரசன்
பாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.

வாணனும் பாணனும்
ஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், ‘யார்?’ என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,”ஐயனே! அருந்தமிழ் வாணனே! அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ?” என்று நயமுறப் பாடினான் பாணன்.11

வாணன் குறும்பு
பின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன்! வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; “உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்” என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் “கிருது” உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, “அண்ணலே! கலை வள்ளலே! உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே! வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை?” என்று வினயமாகப் பாடினான்12. அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.

ஏகம்பவாணன்
இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். “வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ?” என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர்13. வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.
(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++++

குறிப்பு

1. திருக்கோவலூர் இப்போது திருக்கோயிலூர் என வழங்கும்.

2. புறநானூறு, 122.

3. சிறுபாணாற்றுப்படை, 10 -11.

 4. ” புலன்அழுக் கற்ற அந்த னாளன் இரந்துசெல் மாக்கட்கு இனியிடன் இன்றிப் பரந்துஇசை நிற்கப் பாடினன்” – நப்பசலையார் பாட்டு, புறநானூறு, 126

5. இவ் வரலாறு கனகசபைப் பிள்ளை எழுதிய கருத்தைத் தழுவியது. The Tamils. Eighteen Hundred Years Ago, p. 103.

6. பெருந்தொகை, 158, 159.

7. பெருந்தொகை 185.

8. கலிங்கத்துப்பரணி, 365. 5

9. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது.

10. ” மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்” என்று குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.

11. பெருந்தொகை, 188

12. “உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால்

கொலைக்குரிய வேழம் கொடுத்தான் – கலைக்குரிய

வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப்

பாணனோடு என்ன பகை.” – பெருந்தொகை, 188.

13. “வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன்

வாணன் புகழ்உரையா வாய் உண்டோ – வாணன்

கொடிதாங்கி தில்லாத கொம்புண்டோ உண்டோ

அடிதாங்கி நில்லா அரசு.” – -பெருந்தொகை, 181.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue