இந்த வாரம் கலாரசிகன்



பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!'"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.ஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும்? இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.எழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.அந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். "பாஹே' என்கிற புனைப்பெயரில்தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் "ராமஜெயம்' எழுதுகிறார்கள் என்றால், இவர் "ஹேமஜெயம்' என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம்தான் ரசனை இருக்கும். ரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!******வரலாறு என்பது ஒருதலைப் பட்சமாகவே இருந்து வருகிறது. வரலாறை எழுதி வைக்கும் காலம், நபர், அன்றைய சூழல் போன்றவை கூட வரலாற்றில் பல தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான இந்திய தேசிய உணர்வு, ஒரு சில ஆட்சி எதிர்ப்பாளர்களின் நிறைகளையும், நல்ல பல செய்கைகளையும் ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு ஓர் உதாரணம் எட்டயபுரம் சமஸ்தானம்.எட்டயபுரம் பற்றிய வரலாற்றையும், கணிப்பையும் நாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருடனும், வீரபாண்டிய கட்டபொம்முவின் வீர மரணத்துடனும் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கலாகாது, மதிப்பிடலாகாது. எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கலை மற்றும் இலக்கியம் சார்ந்த முகமும். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போலவே, எட்டயபுரம் சமஸ்தானத்தினரும் தமிழ்ப் புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரிப்பதில் முன்னிலை வகித்தனர்.1868-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி முதல் 1878-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான எட்டயபுரம் சமஸ்தானத்தின் சரித்திரத்தை "வம்சமணி தீபிகை' என்கிற பெயரில் அன்றைய சமஸ்தான அதிபதி ஜெகவீரராம குமார எட்டப்பரின் விருப்பப்படி, அப்போதைய சமஸ்தான சம்ஸ்கிருதப் பண்டிதர் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் எழுதி இருக்கிறார். இதில் பாஞ்சாலங்குறிச்சிப் போர், வீரபாண்டிய கட்டபொம்மு ஜாக்சன் துரையையும், பானர்ஜி துரையையும் எதிர்கொண்ட விவரங்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. எட்டயபுரம் ஜமீனுக்கு கும்பெனி கவர்னர் மற்றும் துரையிடமிருந்து வந்த செய்திகள், உத்தரவுகள், மானியங்கள் போன்றவை கூடக் குறிப்பிடப்படுகின்றன.1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதி எட்டப்ப நாயக்கருக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறார். ""முன்பு கவிகேசரி ஸ்ரீஸ்வாமி தீக்ஷிதரால் எழுதப்பட்ட "வம்சமணி தீபிகை' என்ற எட்டயபுரத்து ராஜவம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடன் இருப்பது சன்னிதானத்துக்குத் தெரிந்த விஷயமே. அதைத் திருத்தி நல்ல, இனிய, தெரிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். இதனால் ராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும், தமிழ் மொழிக்கொரு மேன்மை பொருந்திய சரித்திர நூலும் அமையும்'' என்பது பாரதியாரின் விருப்பம்.பாரதி பதிப்பிக்க நினைத்த அந்த நூலை, இளசை மணியன், தொ.மு.சி.ரகுநாதனின் அறிவுரைப்படி எந்தவிதத் திருத்தமும் செய்யாமல் அப்படியே மூலத்தை வெளியிட்டிருக்கிறார். எத்தனையோ சரித்திர நாவல்கள் படித்திருக்கிறோம். இது நாவல் அல்ல. சரித்திரம். நிஜக் கதையைவிட சுவாரசிமானது.ஆ.சிவசுப்பிரமணியன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, முற்றிலும் ஜமீன் சார்புடன் இந்நூல் எழுதப்படிருந்தாலும், இதிலுள்ள செய்திகள் வரலாற்று ஆவணங்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டப்பனின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மு வித்தியாசமாக அல்லவா தெரிகிறார்?******அழகான நெருப்பு என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். "அழுக்கான நெருப்பு' கேட்டிருக்கிறோமா? நெருப்புக்கு அழுக்கா? அது எப்படி? ""செருப்பால் அடித்தாலும் புத்தி வராது'' என்று இனி நான் சொல்லவே மாட்டேன். ""செருப்பு என்ன போதி மரமா புத்தி தர?'' என்கிற கவிதா குமாரின் கேள்விதான் காரணம். அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் "அழுக்கான நெருப்பு'.அதில் "நாரைகள் ஊருக்குப் போய்விட்டன' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue