Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்





 

திருக்குறள் அறுசொல் உரை
 3. காமத்துப் பால்
 15.கற்பு இயல் 
  1. கண் விதுப்பு அழிதல்
காதலனைக் காணும் வேட்கையால்,
காதலியின் கண்கள் துடித்தல்.

(01-10 தலைவி சொல்லியவை)
  1. கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,
      தாம்காட்ட யாம்கண் டது.
        தீராத்துயர் ஆக்கிய கண்களே!
        நீங்கள், அழுவது ஏனோ?
  1. தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்
      பைதல் உழப்ப(து) எவன்?
        விளைவை ஆராயாமல் கண்டகண்,
        பிழைஉணராமல், துன்புறல் ஏன்?
  1. கதும்எனத் தாம்நோக்கித், தாமே கலுழும்;
      இது, நகத் தக்க(து) உடைத்து.
      நீயே பார்த்துவிட்டு நீயே
         அழுவது, சிரிப்புக்கு உரியது.
  1.  பெயல்ஆற்றா, நீர்உலந்த உண்கண், உயல்ஆற்றா,
      உய்(வு)இல்நோய், என்கண் நிறுத்து.
    பொறுக்க முடியாத துன்பத்தால்,
        கண்கள், அழுதுஅழுது வறண்டன.
  1. படல்ஆற்றா; பைதல் உழக்கும், கடல்ஆற்றாக்
     காமநோய் செய்தஎன் கண்.
      கடலினும், பெரிய காமநோயைக்
        கண்கள், தாங்காமல் துன்புறும்.
  1. ஓஒ இனிதே! எமக்(கு)இந்நோய் செய்தகண்,
      தாஅம் இதற்பட் டது.
    காதல் துன்பம் செய்கண்களும்,
        துன்பத்தில் மாட்டிக்கொண்டது, மகிழ்ச்சியே.
  1. உழந்(து)உழந்(து) உள்நீர் அறுக, விழைந்(து)இழைந்து
      வேண்டி யவர்க்கண்ட கண்.
    வேண்டியவரைக் கண்ட கண்கள்,
        கண்ணீர் வற்றும்வரை அழட்டும்.
  1. பேணாது பெட்டார், உளர்மன்னோ? மற்(று),அவர்க்
      காணாது, அமை(வு)இல கண்.
    மனத்தால் விரும்புவார்போல் நடிக்கும்
        காதலரைக் காணாக்கண்கள் தூங்கா.
  1. வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை,
      ஆர்அஞர் உற்றன கண்.
      வாராவிடினும், வரினும், கண்கள்
        தூங்கா; துன்பமும் நீங்காது.
  1. மறைபெறல் ஊரார்க்(கு) அரி(து)அன்(று)ஆல், எம்போல்
      அறைபறை கண்ணார் அகத்து.
        தம்பட்டம் அடிக்கும் எம்போல்
        கண்ணாரிடமிருந்து, கமுக்கம் பெறலாம்.

பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue