சோழர் கால வணிக நகரம்...


தஞ்சாவூர் முத்தரையர் என்னும் சிற்றரசு மரபினரின் தலைநகரமாக விளங்கியது.​ இதை ஏறத்தாழ கி.பி.​ 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான்.​ அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது.​ ​ ​ ​ தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும்,​​ வளஞ்சியர்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.​ ​ ​ முதலாம் ஆதித்தன் காலத்தில் மடிகை என்பது வணிகர்கள் பல வகை சரக்குகளை ஓரிடத்தில் சேமித்து வைத்து வியாபாரம் செய்யும் பண்டகச் சாலை அல்லது கிடங்கைக் குறிக்கும்.​ இந்தச் சொல்லே பிற்காலத்தில் மளிகை என மருவி பலசரக்குக் கடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.​ ​ ​ ​ திருச்சி வட்டம்,​​ திருச்செந்துறையில் உள்ள ராஜசேகரி வர்மன் என்ற பட்டம் கொண்ட சோழ மன்னரின் 12,​ 20-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலயச் செட்டி என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.​ ​ ​ இவையே தஞ்சாவூரில் வணிகர் பற்றிக் கூறும் தொன்மையான கல்வெட்டுகள் ஆகும்.​ முதலாம் ஆதித்தனின் காலத்திலிருந்தே தஞ்சாவூர் பிற நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் செய்யும் நகரமாக வளர்ச்சி பெற்றிருந்தது என அறிய முடிகிறது.​ ​ ​ முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தஞ்சை வீரசோழப் பெருந்தெரு என்ற வணிகர்கள் வாழ்ந்த தெருக்கள் என முதலாம் பராந்தகனின் கல்வெட்டு கூறுகிறது.​ இதேபோல,​​ தஞ்சாவூரில் அப்போது வழங்கப்பட்ட கண்டருள் கண்டப் பெருந்தெரு என்பதும் ஒன்று.​ இங்கு சங்கரப்பாடியார்கள் என்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.​ ​ ​ ​ கங்கைகொண்டசோழபுரத்தில் பூமிக்கடியில் கிடைத்த முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டில் தஞ்சாவூரில் இருந்த இருமடி சோழப் பெருந்தெருவில் வளஞ்சியார் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் வந்து குடியேறியது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.​ வளஞ்சியார் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர்.​ ​ ​ ​ சுந்தர சோழன் காலத்தில் ​(கிபி 957-974) தஞ்சாவூரில் பெரிய அங்காடி என்ற வணிக வளாகம் இருந்தது என அறிகிறோம்.​ ​ ​ இதேபோல,​​ தஞ்சாவூரில் உள்ளாலை சாலியத் தெரு என்ற தெருவில் பட்டு நெசவு மற்றும் துணி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் வாழ்ந்ததையும்,​​ அது தஞ்சாவூர் நகரின் உள்பகுதியில் இருந்தது எனவும் அறிகிறோம்.​ ​ ​ சோழர் காலத்தில் தஞ்சாவூர் மிகப் பெரிய வணிக நகரமாக விளங்கியது.​ இங்கு பல மடிகைகள்,​​ அங்காடிகள்,​​ பேரங்காடிகள்,​​ பெருந்தெருக்கள் முதலியன இருந்தன.​ ​ ​ சங்கரபாடியார்,​​ சாலியர்,​​ வளஞ்சியார்,​​ திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிகர்கள் இங்கு தங்கி வணிகம் செய்தனர்.​ இந்த வணிக நகரம் உள்ளாலை,​​ புறம்படி என்னும் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.தலைநகர மாற்றத்தைத் தொடர்ந்து இங்கு வாழ்ந்த வணிகர்கள் கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்று குடியேறினர்.​ அதன் பின்னர்,​​ 159 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஊர் வணிக நகரமாகப் புத்துயிர் பெற்று,​​ பாண்டியரின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து ஒரு வணிக நகரமாக விளங்கியது என அறிகிறோம்.- முனைவர் இல.​ தியாகராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue