தஞ்சாவூர் முத்தரையர் என்னும் சிற்றரசு மரபினரின் தலைநகரமாக விளங்கியது. இதை ஏறத்தாழ கி.பி. 850 ஆண்டுகளில் விஜயாலயச் சோழன் கைப்பற்றி சோழ அரசை நிறுவினான். அது முதல் ராஜராஜன் காலம் வரை தஞ்சாவூர் சோழப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது. தஞ்சாவூர் அரசியல் தலைநகரமாக மட்டுமன்றி மிகப் பெரிய உள்நாட்டு வணிக நகரமாகவும், வளஞ்சியர், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பன்னாட்டு வணிகக் குழுக்களும் வந்து தங்கி வணிகம் செய்த சர்வதேச வணிக நகரமாகவும் விளங்கியது என்பதை முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து இரண்டாம் ராஜாதி ராஜன் காலம் வரை எழுதப் பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். முதலாம் ஆதித்தன் காலத்தில் மடிகை என்பது வணிகர்கள் பல வகை சரக்குகளை ஓரிடத்தில் சேமித்து வைத்து வியாபாரம் செய்யும் பண்டகச் சாலை அல்லது கிடங்கைக் குறிக்கும். இந்தச் சொல்லே பிற்காலத்தில் மளிகை என மருவி பலசரக்குக் கடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி வட்டம், திருச்செந்துறையில் உள்ள ராஜசேகரி வர்மன் என்ற பட்டம் கொண்ட சோழ மன்னரின் 12, 20-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடக புழலயச் செட்டி என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவையே தஞ்சாவூரில் வணிகர் பற்றிக் கூறும் தொன்மையான கல்வெட்டுகள் ஆகும். முதலாம் ஆதித்தனின் காலத்திலிருந்தே தஞ்சாவூர் பிற நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் செய்யும் நகரமாக வளர்ச்சி பெற்றிருந்தது என அறிய முடிகிறது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தஞ்சை வீரசோழப் பெருந்தெரு என்ற வணிகர்கள் வாழ்ந்த தெருக்கள் என முதலாம் பராந்தகனின் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல, தஞ்சாவூரில் அப்போது வழங்கப்பட்ட கண்டருள் கண்டப் பெருந்தெரு என்பதும் ஒன்று. இங்கு சங்கரப்பாடியார்கள் என்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் பூமிக்கடியில் கிடைத்த முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டில் தஞ்சாவூரில் இருந்த இருமடி சோழப் பெருந்தெருவில் வளஞ்சியார் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் வந்து குடியேறியது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வளஞ்சியார் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். சுந்தர சோழன் காலத்தில் (கிபி 957-974) தஞ்சாவூரில் பெரிய அங்காடி என்ற வணிக வளாகம் இருந்தது என அறிகிறோம். இதேபோல, தஞ்சாவூரில் உள்ளாலை சாலியத் தெரு என்ற தெருவில் பட்டு நெசவு மற்றும் துணி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் வாழ்ந்ததையும், அது தஞ்சாவூர் நகரின் உள்பகுதியில் இருந்தது எனவும் அறிகிறோம். சோழர் காலத்தில் தஞ்சாவூர் மிகப் பெரிய வணிக நகரமாக விளங்கியது. இங்கு பல மடிகைகள், அங்காடிகள், பேரங்காடிகள், பெருந்தெருக்கள் முதலியன இருந்தன. சங்கரபாடியார், சாலியர், வளஞ்சியார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிகர்கள் இங்கு தங்கி வணிகம் செய்தனர். இந்த வணிக நகரம் உள்ளாலை, புறம்படி என்னும் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது.தலைநகர மாற்றத்தைத் தொடர்ந்து இங்கு வாழ்ந்த வணிகர்கள் கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்று குடியேறினர். அதன் பின்னர், 159 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஊர் வணிக நகரமாகப் புத்துயிர் பெற்று, பாண்டியரின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து ஒரு வணிக நகரமாக விளங்கியது என அறிகிறோம்.- முனைவர் இல. தியாகராசன்
Popular posts from this blog
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2020 கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997] அறிபொருள்: மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்: இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்: நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934] அறிபொருள்: சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311] அறிபொருள்: பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321] அறிபொருள்: எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972] அறிபொருள்: பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல் 8....
Comments
Post a Comment