Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்




தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்

இல்வாழ்வியல்

32. இல்லமைத்தல்

  1. அகல நீள மரைக்கான் மைல்கொளல்.
வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும்.
  1. ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல்.
வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும்.
  1. மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல்.
மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும்.
  1. இல்லிற் கீரா யிரமடி சதுரமாம்.
வீடு இரண்டாயிரம் சதுரடி அளவில் இருத்தல் வேண்டும்.
  1. நிலமேன் மதிற்கு நேர்கால் கீழ்செயல்.
நிலத்தின் மேலே மதில் சுவர் நீளத்திற்கு பள்ளமாக வாய்க்கால் வெட்ட வேண்டும்
  1. வளியன னீர்மா வழியா வகைசெயல்.
காற்று, நெருப்பு, வெள்ளம், விலங்குகள் இவற்றால் பாதிக்கப்படாத வகையில் வீடு கட்டப்பட வேண்டும்.
  1. வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல்.
வீட்டினுள் காற்றும் வெளிச்சமும் போதுமான அளவு வந்து செல்லும்படி வீடு கட்டப்பட வேண்டும்.
  1. பொருட்குஞ் செயற்கும் பொருத்தமாப் பகுத்திடல்.
நம்முடைய பொருளாதார நிலைமைக்கும் செயல் திறமைக்கும் ஏற்றவாறு வீடு கட்டப்பட வேண்டும்.
  1. நிலவறை தான்செய னிதிமிகின் மேற்செயல்.
இவை மிகுதியாக இருந்தால் நிலவறை, மேல் வீடு கட்டலாம்.
320.நற்றரு செடிகொடி யிற்புறத் தமைத்திடல்.
நன்மை தரக்கூடிய மரங்கள், செடி கொடிகள் இவற்றை வீட்டிற்கு வெளியே நட்டு வளர்க்கலாம்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue