Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்



( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி)

          பிணைவிழி மாதின் பெறலரும் இளமை

அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்;

இவள்நலம் விழையும் இளவல் கோமகன்       

தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு

95

          குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை;

பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல்

அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்;

படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை 

          விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத்         100

—————————————————————

          திறம்பினள் – மாறினள், உண – உண்ண, பிணை – பெண்மான், தவளம் – வெண்ணிறம்.

—————————————————————

தொடுத்துரை கூறித் துணைவிழி சிவக்க

உயிர்ப்பும் செயிர்ப்பும் உற்றன ளாகிப்

பயனுடை நெடுந்தெரு பலவுடன் கடந்து

வியனுயர் மாளிகை விறலி கண்டனள்; 

          வெண்சுதை பூசிய கண்கவர் மாமனைக்        105

          கண்புகுந் துள்மனைக் காட்சியை வியந்தனள்;

முன்னுள மலர்மணம் முகந்த தென்றல்

படர்தரு மெல்லிய பவர்நுனி யசைத்துச்

சுடர்விடு மாடச் சுவர்கடந் துட்புகச்       

          செய்வினைச் சித்திரப் படாஅம் போர்த்த        110

          துய்யவெண் பஞ்சணைத் தூமலர்க் கட்டில்

இருந்தோன் திருந்தடி பொருந்திநிள் றேத்தினள்     

கோமகன் பூங்கொடியின் நலம்வினவல்

          வந்தவண் ஏத்திய வஞ்சிக்கு வரவுரை

தந்து மகிழ்ந்து தான்பெரு களிப்பால்    

நல்லெயி றிலங்க நகைத்தவன் `வஞ்சி!

115

          மெல்லியல் அருண்மொழி மேவிய நற்பணி

அல்லல் இன்றி ஆற்றுநள் கொல்லோ?

என்னுளம் இருளுறச் செய்தஅவ் விளங்கொடி

முன்னியபொதுப்பணி முட்டின் றோ’என,       

          `ஒருதனி ஓங்கிய திருவுடைப் பெரும!    120

          பெருகிய துயரால் பேதுறத் தினளுனை

என்னையும் மயக்குறுத் திடக்கடல் வீழ்த்தினள்;

நின்னையும் நின்மனம் நிறைந்துள மின்னையும்

பின்னிய அன்பால் பிணைந்தவ ராக்கி 

          வதுவைக் கோலம் கண்டுநான் வாழ்த்த          125

—————————————————————

          பவர் – பின்னியகொடி, படாஅம் – துணி (விரிப்பு), எயிறு – பல்வரிசை, முட்டின்று – தடையில்லை, வதுவை – திருமணம்.

—————————————————————

          முதுமைப் பருவத்து முறுகிய ஆவல்

கனவாய் வெறுமொரு நினைவாய்க் கழிவதோ?

இனைவுறும் என்மனம் மகிழ்வுறல் என்றுகொல்?

நம்பி நினக்கொரு நங்கையும் அவளே! 

          நங்கை அவட்கொரு நம்பியும் நீயே!       130

          நீமுனைந் தெழுவையேல் நேரிழை நின்னுழைக்

காமுறல் திண்ணம் கடிதினில் விரைக கடிமணம் கொண்டு படிமிசை வாழ்’கென;    

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்