கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி)
பூங்கொடி
19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை
பருவம் பாழ்படுவதா?
சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது
பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55
கருதின ளாகிக் கழிவது முறையோ?
தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும்
மூடரும் உளரோ? முக்கனி யாகிய
தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும்,
கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60
அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில்
நைந்து சிதைவதில் நன்மையும் உளதோ?
ஐந்து பொறியிவள் அடக்கவும் வல்லளோ?
கடப்பருங் காமம்
இல்லறத் திருந்துநல் லின்பந் துய்த்தபின்
நல்லஇவ் வுலகினை நஞ்சென வெறுத்துச்
65
செல்லும் துறவரும் சிற்சில போழ்து
கொல்லும் காமங் கோட்பட் டுழன்றும்
அல்லன புரிந்தும் அலைவுறல் கண்டோம்;
ஒருநலம் உணரா துறைபவள் இவளை
வருமிளம் பருவம் வருத்தா தொழியுமோ? 70
பழிக்கும் வினைகளை இழைக்கும் வழிகளில்
நுழைத்திடும் அந்தோ! நுண்ணிடை மகளை;
ஆசை கெடுத்தனள்
குடிதழைத் திடவரூஉம் குலக்கொடி இவளென
நெடிதுநினைந் திருந்தேன் கொடியவள் ஆயினள்,
—————————————————————
படாஅது – சொல்லாமல், கோட்பட்டு – கொள்ளப்பெற்று, வரூஉம் – வரும்
—————————————————————
பரம்பரை அறுந்திடத் திறம்பினள் குழம்பினள், 75
நரம்பறும் யாழென நலிந்தனள் மெலிந்தனள்;
வேட்புறுங் கோமகன்
கற்றோர் மற்றோர் கணக்கிலாச் செல்வம்
உற்றோர் இவள்மணம் ஒன்றே வேட்டுக்
கடைவிழி நோக்கிக் காத்துக் கிடப்போர்
படைஎனு மாறுளர்; பரிவுறும் அவருள் 80
செல்வமும் இளமையும் சேர்ந்தெழில் பொங்கும்
நல்லவன் கலைபயில் வல்லவன் ஒருவன்
கோமகன் என்னும் குறியுடை யானவன்
பூங்கொடி நலமுண வீங்கிய வேட்கையன்
தாங்கருங் காமம் ஓங்கின னாகி 85
உடலும் பொருளும் உயிரும் ஈயக்
கடவன் அவனை மடவனென் றொதுக்கினள்;
அப்பெருஞ் செல்வனை ஒப்பின ளாகித்
தப்பருங் காதல் தடத்தினில் நீந்தித்
துணையுடன் இருந்தே தொண்டுகள் ஆற்றின் 90
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment