Skip to main content

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17

 அகரமுதல




(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17 தொடர்ச்சி)

 

    தனித்தமிழ்க் கிளர்ச்சி 12/17

பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்
செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானை
செல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்
கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானை
அறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை       (56)

அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்
படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானை
படத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தை
நடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானை
நாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை       (57)

ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்
ஊர்தோறும் நூல்நிலையம் ஒன்றுவேண்டும் அம்மானை
ஊர்தோறும் நூல்நிலையம் ஒன்றுவேண்டு மாமாயின்
சீர்மிகுபன் னுல்தோன்றிச் செழிக்குமன்றோ அம்மானை
செழிக்கத் தமிழ்மொழியும் சிறப்புறும் அம்மானை       (58)

பெண்கள் முன்னேற்றம்

மடுக்கும் பிழைப்பிற்கா மக்களெலாம் ஒரு தொழிலை
அடுக்குமுன் கல்விதனில் ஆழவேண்டும் அம்மானை
அடுக்குமுன் கல்விதனில் ஆழவேண்டும் என்றிடினே
அடுப்பூதும் பெண்கட்கும் படிப்பெதற்கு அம்மானை
அடுப்பூதல் ஒருதொழிலென் றறிந்திடுவாய் அம்மானை       (59)

பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் அம்மானை
பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் எனினின்று
புன்மக்கள் சிலர்தடைதான் புரிகின்றார் அம்மானை
புரிபவர்கள் கொலைதமிழ்க்குப் புரியவாராம் அம்மானை       (60)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

57 – பள்ளிக்கூடங்களில் படிக்கமுடியாத முதியோர் பெண்கள் முதலானோர்க்குத் திரைப் (சினிமா) படத்தின் வாயிலாகக் கல்வியைப் புகட்டவேண்டும்.
58 – ஊர்தோறும் நூல்நிலையம் ஏற்பட்டால் பல துறை நூற்கள் பெருகித் தமிழ் செழிக்கும்.
59 – எத்தொழில் செய்வோர்க்கும் கல்வி தேவை. சமையலும் ஒரு தொழிலாதலின் பெண்கட்கும் கட்டாயக் கல்வி தேவை. நன்மக்களைப் பெற்று நாட்டிற்கு நலனளிக்கும்
60 – பெண்களின் தமிழுணர்ச்சிக்குத் தடைசெய்கின்றனர் சிலர். அது, தமிழையே கொலை செய்வதாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue