Skip to main content

உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப்பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்

      16 February 2026      கரமுதல



(க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் – தொடர்ச்சி)

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம்.
தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது.
தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க நடுவணரசு ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக.
தமிழ்நாட்டில் வருவாய் மிகுதியாக வரும் அஞ்சல்துறை, இருப்பூர்தித் துறை, சுங்கத்துறை, வருவாய்த் துறை, வாழ்நாள் காப்பீட்டுத் துறை, வைப்பகத் துறை முதலியன இந்திய நடுவணரசின் ஆளுமைக்குள்பட்டவை. இவற்றில் தமிழ் மொழிக்கு இடமில்லை. இந்திக்கு முதலிடம், அடுத்தவிடம் ஆங்கிலத்திற்கு.
தமிழ்நாட்டின் கனிப்பொருள்கள், அகழ்பொருள்கள், இயற்கை வளங்கள் நடுவணரசுக்கே சொந்தம். இந்த நாட்டில் இயற்கைச் சீற்றங்களால் சேதங்கள் ஏற்பட்டால் நடுவணரசு ஒருகுழு அனுப்பி ஆய்வு செய்து ஒன்றுக்குப் பாதியோ, விருப்பமானதோ அளிக்கும்.
தமிழ்நாட்டின் ஆட்சியகத்தில் ஏதாவது பழுது செப்பனிட வேண்டுமெனின், ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி ஒப்புதல் பெற்றே செய்தல் வேண்டும்.
இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியப் பெரும்பாலும் தலைமைப் பொறுப்புகளில் பிராமணர்களே அமர்த்தப் பெறுகின்றனர். அல்லது இந்திய ஆளுங்கட்சியினர்க்கு இடங்கிடைக்கும். இந்தி கற்றவர்க்கே முன்னுரிமை.
தமிழக அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. (தமிழ், ஆங்கிலம்) எனினும், தமிழக அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்திற்கே முதலிடம், தமிழுக்கு இரண்டாம் இடமே. தொடக்கப்பள்ளிகளில் கூட ஆங்கிலமே களிநடம்புரிகிறது.
தமிழ்நாட்டின் செல்வமெல்லாம் இந்துமதக் கோவில்களில் முடக்கப்பட்டுள்ளன. இன்றும் முடக்கப்படுகிறது. சோம்பேறிகளின் புகலிடமாகிவிட்டன கோவில்கள்; கோவில் வழிபாட்டில் கூடத் தமிழுக்கு இடமில்லை.
தமிழகப் பாடநூல்களில் தமிழக வரலாறு இருட்டடிக்கப்பட்டு, பாரத – இராமாயண காலமுதல் வரலாறு தொடங்கப்படுகிறது. முதல் வகுப்புத் தமிழ்ப்பாடப் பொத்தகத்தில் “ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ” என்கிற கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டு வேற்றுமொழிச் சொற்கள் தமிழில் கலக்கப்பட்டுள. தமிழ் மொழியின் இயல்பு அறியாச் சில்லோர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், மொழிச் சீர்திருத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். அவ்வழியில் முனைந்து செயல்படுவது “சூனியர் விகடன்” என்னும் ஏடே.
இன்று தமிழ்நாட்டில் தமிழின் நிலையும், தமிழர் நிலையும் சீர்குலைந்து விட்டன. தமிழை வளர்க்கப் பாடுபடுகிறோம் என்பவர் சொல்லளவோடு இருக்கிறார்களேயன்றிச் செயலளவில் எதுவும் செய்கின்றிலர்.
தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை, நாகரிகம் அழிக்கப்பட்டு ஆரியப்பண்பாடு, பழக்க வழக்கங்கள் பரப்பப் படுகின்றன. தமிழர் அவற்றையே விரும்பி ஏற்கின்றனர். தம்மவற்றை விடுகின்றனர்.
தமிழ்மக்கள் பேச்சுவழக்கில் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது. தமிழ் இலக்கியங்களைப் படிப்பவர்களும் அருகிவிட்டனர்.
தமிழ் மக்கள் பிழைப்பிற்காக அயல்நாடுகளில் போய் வாழ்கின்றனர். அங்கு அவர்கட்கு இழைக்கப்படும் இன்னல் களைய இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், கன்னியாகுமரியில் வாழ்கிற வடநாட்டானுக்குத் தேள் கொட்டியதென்றால், காசுமீரானுக்கு அண்டை கட்டுகிறது.
கிழக்குப் பாகித்தானில் முசிபுர் ரகுமானுக்குப் படைகள், பணம் உதவி, பங்களாதேசம் அமைக்கச் செய்த இந்தியஅரசு, 1983 ஆம் ஆண்டில் சிங்களவர் ஈழத்தமிழரைப் படுகொலை செய்ததை வேடிக்கை பார்த்ததே.கருநாடகம், மகாராட்டிரம்,

மத்திய நாடுகளில் கொலை, கொள்ளை முதலிய கொடுமைகட்கு ஆளான தமிழர்க்கு உதவிற்றா?
தமிழக மக்கள் பலர் உணவு, உடை, உறையுளின்றித் தொல்லைப்படுகின்றனர். அவற்றைப் போக்க ஆவன செய்யாது ஒரு சிறுகல் உருவை வைத்து ஊரையடைத்துக் கோவில்கள் கட்டுவதும், அவற்றைப் பழுது பார்க்கப் பல கோடி உருபா செலவிடுவதும் முறையாகுமா?
சமயச் சார்பற்ற அரசு இந்திய அரசு என்று சொல்லப்படுகிறது. சாதி,சமயம் ஒழிய வேண்டும் என்கிறது. ஆனால், சமயங்கள் பரவப் பெரிதும் பாடுபடுகிறது. மாவட்டங்களைச் சாதியின் பெயராலும், சமயத்தின் பெயராலும் பிரித்துக் கொண்டேயிருக்கிறது.
வரவு செலவுத் திட்டம் கொணருங்கால் ஆண்டுதோறும் வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி ஏழை மக்களுக்கு இடையூறு விளைக்கிறது அரசு. மக்களுக்கு நாள்தோறும் தேவையான இன்றியமையாப் பொருள் உயர்வைக் கட்டுப்படுத்த அரசால் இயலவில்லை. ஏழைமக்கள் பலர் பசிப்பிணியால் நலிகின்றனர்.
காவிரி நீர்ப்பங்கீடு பற்றி நடுவர் மன்றம் செய்த தீர்ப்பை, நடைமுறைப்படுத்தாமல், நடுவணரசு மழுப்பிக் கொண்டேயிருப்பதால், தமிழ் மக்கள் படும் அல்லல்கள் பல. கேட்பார் யார்?
நாம் இந்தியர், நம்நாடு இந்தியா, (இப்பொழுது பாரதம், பாரத மக்கள் என்கின்றனர்), என்று செப்புகின்றனர்.

ஒருமைப்பாடு பேசுகின்றனர். ஏன்? தமிழர் மீதேறிச் சவாரி செய்ய தமிழர், தமிழ்நாடு என்னாகும்? எண்ணுக.
தமிழ்நாட்டில் தமிழில் புலமை பெற்றவர்கட்கு வேலை இல்லை. தமிழ்ப்புலமை பெற்றவர் பல்லாயிரம் பேர் பணியின்றித் தவிக்கின்றனர். தமிழ் படித்தவர்கட்கு வேறு எங்கு வேலை கொடுப்பர்? அரசியல் தலைவர்கள் இவையெல்லாம் பற்றிக் கவலைப்படாது மக்களை வஞ்சித்துப் பதவிகளில் அமர்ந்து பெருஞ்செல்வம் சேர்க்க அலைகின்றனர். அடிமை வாழ்வு பற்றி அவர்கட்கு அக்கறையில்லை. எங்ஙனம் பதவி, பணம் பெறலாம் என்பதே அவர்களது குறி.
தமிழக இளந்தலைமுறையினரே! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து விடுதலையுணர்வோடு உலகம் மதிக்க வாழ முயலுங்கள். இன்றைய அடிமை வாழ்வை அகற்ற முயலுங்கள். தமிழர், தமிழ்நாடு உலக அரங்கில் இடம்பெற ஆவன செய்யுங்கள். தமிழர்கள் ஏமாளிகள் என்பது நடுவணரசின் கணிப்பு.
அதனால்தான், மொழிவழி மாநிலம் பிரித்த பொழுது தமிழ்நாட்டின் பண்டைய வடவெல்லையாகிய வேங்கடத்தையும், வடசென்னையையும், தெலுங்குநாட்டிற்கும், தெற்கில் இருந்த பீளைமேட்டையும், முகவை மாவட்டத்திற்குரிய கச்சத்தீவையும் முறையே கேரளத்திற்கும், இலங்கைக்கும் தாரை வார்த்துவிட்டுத் தவிக்கின்றனர்.
காவிரியின் தலைப்பில் கன்னட அரசு ஆங்கிலேயர் கட்டிய அணையை அடுத்து இரண்டு அணைகள் கட்டியுள்ளது. இதைத் தமிழ்நாட்டை ஆளும் கட்சியினர் கண்டும் காணாது போல இருந்து விட்டனர். இன்றும் இருக்கின்றனர். வடவர்க்கு வால் பிடிக்கும் கட்சிகள் கவலைப்படுவதில்லை.
இப்பொழுது காவிரி நீர்பற்றிய நடுவர்மன்றத் தீர்ப்பை நடுவணரசு நடைமுறைப்படுத்தாமல் காலங்கடத்துகிறது. தமிழக முதல்வர் செயலலிதா நடுவணரசை வற்புறுத்த 18.07.1993 முதல் 21.07.1993 வரை உண்ணா நோன்பிருந்தார். இந்திய நீர்வளத் துறை அமைச்சர் சுக்லா வந்து காவிரிநீர் கண்காணிப்புக் குழுவும், உயர்மட்ட இணைப்புக் குழுவும் அமைத்து, காவிரி நீர்ச்சிக்கலைத் தீர்த்து விடுவதாகக் கூறிச் சென்றுள்ளார். இக்குழுக்கள் அமைப்பதை கருநாடக அரசு ஏற்க மறுத்து தீர்மானமும் நிறைவேற்றியுளது.
எனவே, வடவர் தமிழர் ஏமாளிகள் என்று முடிவு செய்து செயல்படுகின்றனர். வடவர்க்கு ஒத்து ஊதத் தமிழர் பலரிருக்கும் போழ்து அவர்களைக் குறை கூறி யாது பயன்?
வடவர்க்கு அடிமைகளாக வாழ்வதை விட, மானங்கெடாமல் மடிவது நன்றென்று உங்கள் முன்னோர் கூறிய முதுமொழிகளை நினைவு கூர்க. வெல்க, வாகை சூடுக.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்