Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்

திருக்குறள் அறுசொல் உரை
  1. காமத்துப் பால்
 15.கற்பு இயல் 
  1. நினைந்தவர் புலம்பல்

 இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப்,
பிரிவினில் நினைந்து புலம்புதல்.

(01-02 தலைவன் சொல்லியவை
  1. உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,
      கள்ளினும், காமம் இனிது.
காதலை, நினைத்தாலே இனிக்கும்;
கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.

  1. எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்
      நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல்.
காதலியை நினைத்தாலே துன்பம்
வாராதே; காதல்தானே இனிது.

[03-10 தலைவி சொல்லியவை]
  1. நினைப்பவர் போன்று, நினையார்கொல்? தும்மல்
      சினைப்பது போன்று, கெடும்.
       தும்மல் வருவதுபோல் தோன்றி,
வராதுபோல், நினைப்பார்போல், நினையாரோ….?

  1. யாமும் உளேம்கொல், அவர்நெஞ்சத்(து)? எம்நெஞ்சத்(து)
      ஓஒ….! உளரே அவர்.
காதலர் நெஞ்சுள் இருக்கிறேனா?
எனது நெஞ்சுள் இருக்கிறாரே!

  1. தம்நெஞ்சத்(து) எம்மைக் கடிகொண்டார்; நாணார்கொல்
      எம்நெஞ்சத்(து) ஓவா வரல்?
       தம்நெஞ்சுள் வரவிடாதார், எம்நெஞ்சுள்
வருதற்கு வெட்கம் கொள்ளாரோ?

  1. மற்று,யான் என்உள்ளேன் மன்னோ? அவரொடு,யான்
      உற்றநாள் உள்ள, உளேன்.
இன்னும், இருக்கின்றேன்; எதனால்?
இன்புற்ற நாள்களை நினைப்பதனால்.

  1. மறப்பின் எவன்ஆவன் மன்கொல்….? மறப்(பு)அறியேன்;
      உள்ளினும், உள்ளம் சுடும்.
காதலரை மறந்தால் என்னதான்
ஆவேனோ? அந்நினைப்பே சுடுமே!

  1. எனைத்து நினைப்பினும், காயார்; அனைத்(து)அன்றோ
      காதலர் செய்யும் சிறப்பு?
காதலரின் சிறப்பே, எத்தனை
முறைகள் நினைத்தாலும், சினவாமை,

  1. விளியும்என் இன்உயிர், “வே(று)அல்லம்” என்பார்
      அளிஇன்மை, ஆற்ற நினைந்து.
         “ஒருவருக்குள் ஒருவர் என்பார்தம்
அருள்இன்மையை நினைத்தால், உயிர்போம்.

  1. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்,
      படாஅதி, வாழி! மதி.
பிரிந்தாரைக் காணற்கு வசதியாக,
நிலவே! மறையாதே! நில்.
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்