செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி
செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 26 அக்தோபர் 2014 கருத்திற்காக.. 18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு (Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர். 109 பேர் காயமடைந்தனர். அக்குழுவினர் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. விசாரணையில் அக்குழுவினர், அல்கெய்தா அமைப்புடன் தொடர்புடைய கிழக்கு தர்கிசுதான் இசுலாமிய அமைப்பினர்(East Turkestan...