Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

 அகரமுதல




(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி)

இந்நூலாசிரியரைப் பற்றி. . .

85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். )

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் – திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர், பேராசிரியர் – துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி – சூன் 1979) தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அட்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் – காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி, 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது (த.ப.க. வெளியீடு). 1986 முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாகவும் இருப்பவர். 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து ‘டாக்டர்’ (பி.எச்டி.,) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது. எம்.ஃபில்., பி.எச்.டி., மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன, பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன் – வரலாறு (13), திறனாய்வு (21), அறிவியல் (20), ஆராய்ச்சி (6), ஆக 122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல் நூல்களுள் மூன்றும், சமய நூல்களுள் நான்கும் தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ‘அருங்கலைக்கோன்’ என்ற விருதினையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு ‘சிரீசடகோபன் பொன்னடி’ என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு ‘திரு.வி.க.’ விருதினையும் (10,000 வெண்பொற்காசுகள் – 1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும் (1991), இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி ‘இராசா சர் முத்தையவேள்’ விருதினையும் (50,000 வெண் பொற்காசுகள் – 1994), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் ‘பேராசிரியர் இராதாகிருட்டிணன்’ விருதினையும் (1994 – 1000 வெண்பொற்காசுகள்), சென்னை  ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் ‘சிரீ இராமாநுஜர்’ விருதையும் (1996 – 25,000 வெண் பொற்காசுகளையும்) வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவர்தம் இயற்றமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழ் இயல் இசை நாடக மன்றம் (அரசு) ‘கலைமாமணி’ என்ற விருதினையும் (1999 – 3 சவரன் தங்கப் பதக்கம்), இவர்தம் வாழ்நாள் பல்துறைப் பணிகளைப் பாராட்டி மதுரை – காமராசர் பல்கலைக் கழகம் ‘டி.லிட்’ (மதிப்பியல்) பட்டத்தையும் (1999), இவர்தம் தமிழ் – சமயப் பணியைப் பாராட்டி காஞ்சி – காமகோடி பீட அறக்கட்டளை ‘சேவாரத்னா’ விருதையும் (1999 – ஆயிரம் வெண்பொற்காசுகள்), (1941-50)களில் இவர் முயற்சியால் நான்கு உயர்நிலைப் பள்ளிகளை (தாம் தலைமையாசிரியராகப் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளியைத் தவிர) நிறுவி கிராமப்புறங்களில் உயர்கல்வி ஏற்பட வசதி செய்ததைப் பாராட்டும் வகையில் துறையூர்த் தமிழ்ச் சங்கமும் அவ்வூர் நகராண்மைக் கழகமும் இணைந்து சிறந்ததோர் வரவேற்பினை நல்கிச் (செட்டம்பர்) சிறப்பித்தன. இவர்தம் வைணவ – இலக்கியப் பணியைப் பாராட்டிச் சென்னை கோயம்பேடு ‘மனிதநேய வைணவ இயக்கம்’ ‘வைணவ இலக்கிய மாமணி’ விருதையும் (2001), இவர்தம் வாழ்நாள் ஒட்டுமொத்தமான தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘தினத்தந்தி அறக்கட்டளை’ ‘சி.பா. ஆதித்தனார் ‘மூதறிஞர் விருதையும்’ (2001 – ஓர் இலட்சம் வெண்பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தன.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் படைப்புகளின் சிறப்பியல்புகள்.

 பேராசிரியர் முனைவர் ந.சுப்புரெட்டியாரின் நூல்கள்

ஆசிரியம் (5)

       1. தமிழ் பயிற்றும் முறை

      2. அறிவியல் பயிற்றும் முறை

      3. கவிதை பயிற்றும் முறை

     4. கல்வி உளவியல் கோட்பாடுகள்

    5. யுனெசுகோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்

 

இலக்கியம் (15)

  1. கவிஞன் உள்ளம்
    7. காலமும் கவிஞர்களும்
    8. காதல் ஒவியங்கள்
    3. அறிவுக்கு விருந்து
    10. அறிவியல் தமிழ்
    11. திருக்குறள் கருத்தரங்கு மலர். 1974 பதிப்பு
    12. கம்பனில் மக்கள் குரல்
    13. முத்தொள்ளாயிர விளக்கம் (பதிப்பு)
    14. காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது (பதிப்பு)
    15. திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்
    16. தமிழ் இலக்கியங்கள்- அறம், நீதி முறை
    17. புதுவை(மை)க் கவிஞர்-சுப்பிரமணிய பாரதியார்: ஒரு கண்ணோட்டம்
    18. பாவேந்தர் பாரதிதாசன்: ஒரு கண்ணோட்டம்
    19. திருக்குறள் தெளிவு
    20. வாய்மொழியும் வாசகமும்

சமயம், தத்துவம்

(அ) விளக்க நூல்கள் (29)

  1. முத்திநெறி (தமிழக அரசு பரிசு பெற்றது)
    22. சைவ சமய விளக்கு
    23. சைவ சித்தாந்தம்- ஓர் அறிமுகம்
    24. சைவமும் தமிழும்
    25. வைணமும் தமிழும்
    26. ஆன்மீகமும் அறிவியலும்
    27. வைணவ உரைவளம் (ஐதிகம், இதிகாசம், சம்வாதம்)
    28. கலியன்குரல்
    29. கீதைக்குறள் (பதிப்பு)
    30. கண்ணன் எழில் காட்டும் கவிதைப் பொழில் (பதிப்பு)
    31. ஆண்டாள் பாவையும் அழகு தமிழும் (பதிப்பு)
    32. கண்ணன் துதி பதிப்பு)
    33. இராம தோத்திரம் (பதிப்பு)
    34. முருகன் துதியமுது (பதிப்பு)
    35. திருப்பாவை விளக்கம்
    36. நவவித சம்பந்தம்
    37. அர்த்த பஞ்சகம்
    38. அர்ச்சிராதி
    39. ஐந்து இரகசியங்கள்

(ஆ) திருத்தலப் பயணநூல்கள்

  1. மலைநாட்டுத் திருப்பதிகள்
    41. தொண்டை நாட்டுத் திருப்பதிகள்
    42. பாண்டி நாட்டுத் திருப்பதிகள்
    43. வடநாட்டுத் திருப்பதிகள்
    44. சோழ நாட்டுத் திருப்பதிகள் – முதற்பகுதி (த.அ. பரிசு பெற்றது)
    45. சோழநாட்டுத் திருப்பதிகள் – இரண்டாம் பகுதி (த.அ. பரிசு பெற்றது)
    46. தம்பிரான் தோழர்
    47. நாவுக்கரசர்
    48. ஞானசம்பந்தர்
    49. மாணிக்க வாசகர்

திறனாய்வு (24)

  1. பாட்டுத்திறன்
    51. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
    52. கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்
    53. அகத்திணைக் கொள்கைகள்
    54. கவிதையநுபவம்
    55. அண்ணல் அநுமன்
    56. புதுக்கவிதை போக்கும் நோக்கும்
    57. கண்ணன் பாட்டுத் திறன்
    58. பாஞ்சாலி சபதம்- ஒரு நோக்கு
    59. பாரதீயம் (த. அ. பரிசு பெற்றது)
    60. குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு
    61. உயிர் தந்த உத்தமன் (பதிப்பு)
    62. ஆழ்வார்கள் ஆரா அமுது
    63. விட்டு சித்தன் விரித்த தமிழ்
    64. சடகோபன் செந்தமிழ்
    65. பரகாலன் பைந்தமிழ்
    66. பாவேந்தர் பாட்டுத்திறன்
    67. பாண்டியன் பரிசு: ஒரு மதிப்பீடு
    68. கவிஞர் வாலியின் அவதார புருசன்: ஒரு மதிப்பீடு
    69. கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி: ஒரு மதிப்பீடு
    70. வாழும் கவிஞர்கள்
    71. அறிவியல் நோக்கில்-இலக்கியம், சமயம், தத்துவம்
    72. தந்தை பெரியார் சிந்தனைகள்
    73. பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
    74. இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

வரலாறு, தன் வரலாறு (15)

  1. நினைவுக் குமிழிகள்- முதற் பகுதி
    76. நினைவுக் குமிழிகள்- இரண்டாம் பகுதி
    77. நினைவுக் குமிழிகள்- மூன்றாம் பகுதி
    78. நினைவுக் குமிழிகள்- நான்காம் பகுதி
    79. நினைவுக் குமிழிகள்- ஐந்தாம் பகுதி
    80. மலரும் நினைவுகள்
    81. நீங்காத நினைவுகள்
    82. வேமனர்
    83. குரசாட
    84. சி. ஆர். இரெட்டி
    85. தாயுமான அடிகள்
    86. பட்டினத்தடிகள்
    87. வள்ளல் இராமலிங்க அடிகள்
    88. இராமாநுசர்
    89. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள்
    90. தமிழ்க்கடல் இராய.சொ.
    91. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

அறிவியல் (15)

  1. மானிட உடல்
    93. அணுவின் ஆக்கம்
    94. இளைஞர் வானொலி
    95. இளைஞர் தொலைக்காட்சி
    96. அதிசயமின்னணு
    97. நமது உடல் (த. அ. பரிசு பெற்றது)
    98. அம்புலிப் பயணம்
    99. தொலை உலகச் செலவு
    100. அணுக்கரு பெளதிகம் (செ.ப.க. பரிசு பெற்றது)
    101. இல்லறநெறி
    102. வாழையடி வாழை
    103. அறிவியல் விருந்து (தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது)
    104. தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்
    105. விண்வெளிப் பயணம் (த. அ. பரிசு பெற்றது)
    106. இராக்கெட்டுகள் (த. அ. பரிசு பெற்றது)
    107. தமிழில் அறிவியல் செல்வம்

ஆராய்ச்சி (7)

  1. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
    109. வைணவச் செல்வம்-முதற்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு)
    110. வைணவச் செல்வம்-இரண்டாம்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழகவெளியீடு)
    111. வடவேங்கடமும் திருவேங்கடமும்
    112. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar
    113. Studies in Arts and Science (61st Birth Day commemoration volume)
    114. Collected Papers

பேராசிரியர் ரெட்டியாரைப் பற்றி அறிஞர் சிலர் புகழாரங்கள் . . . .

‘சாதி அமைப்பு ஒழிக்கப் பெறாதவரை நாட்டிற்குக் கதி மோட்சம் இல்லை ’ என்பது இவர் கொள்கை. தந்தை பெரியார் அடிச்சுவட்டை ஓரளவு பற்றியவரல்லவா?

– சிலம்பொலி செல்லப்பன் (இவர் மாணவர்)

நெம்புகோல் விஞ்ஞானம் கற்ற ஆசான்
நெடுமாலின் திருவருளால் தமிழைச் சேர்ந்தார்
அம்பலத்தில் ஆடாமல் அறைக்குள் ஆய்ந்தே
அறிவுலகப் பலதுறையில் நூல்கள் யாத்தார்’

ஆழ்வார்கள் பாசுரத்தில் மூழ்கி மூழ்கி
ஆழங்கால் படுவதவர் பிறவிப்பேறு
;
வாழ்விற்கும் கருவிதரும் விஞ்ஞானத்தில்
வைத்திருக்கும் பேரறிவு கல்விப்பேறு;

ஆழ்வாரின் தலைமணியாம் நம்மாழ்வாரை
அருகணைய வாய்த்ததுவே ஆய்வுப்பேறு;
பால்வார்க்கும் தாய்போல துறைகள் தோறும்
பலநூல்கள் அவர்யாத்தால் தமிழர் பேறே.

– முனைவர் அ. சிங்காரவேலன், தமிழ்ப்பேராசிரியர்

(ஓய்வு) தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலைக்

– கல்லூரி (ரெட்டியாரின் மாணாக்கர்)

 

(நிறைவு)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue