Skip to main content

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்


nannaal

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு எனவே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Comments