Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன்

 







தமிழர் பண்பாடு – முன்னுரை

தமிழர் பண்பாடு
(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)
1.முன்னுரை


வரலாற்றின் குறிக்கோள்


வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.


இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறு பட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு, ஆகிய இவற்றில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் உளவான நாடுகளோடு கொண்டிருந்த உறவுநிலை, குறியீட்டு நிலையாம் எளிய தொடக்க நிலையிலிருந்து, அரிதின் முயன்று பயின்றாலல்லது, எளிதில் விளக்கம் பெறமாட்டா. இலக்கிய இலக்கண மரபுகள், முடிந்த முடிபாக முழுமையாக்கப்படும் வரையான, அவர்தம் இலக்கிய வளர்ச்சியின் விரிவுரை விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்பதின் பொருள் என்றால், தொல்லூழிக் காலத்திலிருந்து, கி.பி. 600 வரையான காலத்திற்கான தமிழர்களின் வரலாற்றினைத் திரும்ப வரைதற்குத் தேவைப்படும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் உள்ளன, அவ்வரலாற்றுக்கதை மறுபடியும், வரையப்படுவது முயலப்பட்டுள்ளது இந்நூலில்.

மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலக்கட்டங்களைச் சேர்ந்தனவாகிய கற்களால் ஆன படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும் பொருட்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, அப்பழம்பெரும் நாட்களில் தமிழர்கள் நடத்திய வாழ்க்கைநிலை பற்றிய ஒரு மதிப்பீடு சென்னைப் பல்கலைக் கழகம், 1926ல் வெளியிட்ட “இந்தியாவின் கற்காலம்” என்ற என் நூலில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது.


பழைய இரும்புக் காலத்தைச் சேர்ந்தனவாய படைக்கலங்களாலும், தொழிற்கருவிகளாலும் சிறிய அளவிலும், வடநாட்டு ஆரிய நாகரிகத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர், அவர்கள் வழங்கிய சொற்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவால் மிகப்பெரிய அளவிலும் தெரியவரும். அவர்களின் சமூக, சமய, அரசியல் தொழிலியல் வாழ்வு நிலைகள், சென்னைப் பல்கலைக்கழகம் 1929ல் வெளியிட்ட “ஆரியத்திற்கு முந்திய தமிழர் நாகரீகம்” என்ற என் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (அவர்களின் பழம் இலக்கியச் சார்புடையவும், வேறு வகைச் சார்புடையவும் ஆய கால வெள்ளத்தின் அழிவுக்கு ஆட்பட்டுப் போகாமல், என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமற்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் இலத்தீன் தொன்மை வாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக் கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறு தொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.


வரலாற்று மூலங்கள்


தனி ஒருவர், மற்றும் சமூக வாழ்வின் குறிக்கோள் ஒழுக்கம் பற்றிய ஆரியரின் பழங்கருத்துகளைக் கொண்டிருப்பதான, மந்திரங்கள், பிராமணம் என்ற பொருளில் நான் கொள்வதான வேத இலக்கியம் (இரண்டுமே ஒரு சேர இருந்து வேதங்கள் எனப்படுவன வாகி) மற்றும் சூத்திரம், அதுபோலவே இராமாயணம், மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பெளத்த, அர்த்தமாக செயின் பழம்பெரும் பாலி மொழியிலான இலக்கியங்கள், அதாவது, ஆரிய வரலாற்று மூலங்கள் அனைத்தும், வரலாற்றுச் செய்திகளுக்காக முழுமையாகத் துருவித் துருவி ஆராயப்பட்டு விட்டன. இவை போலும் வரலாற்று மூலங்களிலிருந்து பெறப்படும் செய்திகள் ஆரியர்கள், தமிழர்களோடு கொண்ட தொடர்பினை மட்டுமே விளக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

வட இந்தியப் பழங்கதைகளைக் குறிப்பாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பழங்கதைகளை எடுத்தாளும் நிலையில், நான். திருவாளர் பருகிதர் அவர்களின் நுணுகிய ஆய்வு முறையினையும் முடிவுகளையும், பெரும்பாலும் முழுமையாகப் பின்பற்றியுள்ளேன். இக்குவாகு காலத்திற்கும் சிரீ கிருட்டிணன் காலத்திற்கும் இடையில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்து வந்து காட்சி அளித்துப் படிப்பவரைக் குழப்பத்திற் குள்ளாக்குவோர்களாய அகத்தியர் ஒரே அகத்தியர் அல்லர், வசிட்டர், ஒரே வசிட்டர் அல்லர், விசுவாமித்திரர், ஒரே விசுவாமித்திரர் அல்லர். அந்தந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு பெயர் கொண்டு வாழ்ந்த பலராவர். அப்பெயர்கள் தனித்தனி மனிதர்களைக் குறிப்பன அல்ல. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு குடிப்பெயரைக் குறிப்பனவாம் என்பது, திருவாளர் பருகிதர் அவர்களின் பல்வேறு கருத்துகளில் நனிமிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்முடிவு, குழப்ப நிலையைக் குறைத்துத் தெளிவு நிலையினைத் தோற்றுவித்ததோடு, வட இந்திய நாடுகளில், பழங்காலத்தே அடுத்தடுத்து அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிப் பெரும்பாலும் சரியானதொரு பட்டியலை, பொதுவாகப் பின்பற்றும் இப்பட்டியலைத் திருவாளர் பருகிதர் அவர்கள் தயாரிக்கத் துணையும் புரிந்தது. (இப்பட்டியல்) வேதகாலத்தில் தென்னாட்டில் ஆரிய நாகரீகம் மெல்ல மெல்லப் பரவிய நிலையினைக் கண்டுகொள்ள எனக்கும் துணை நின்றது.


மெசபடோமிய, எகித்தியக் கல்வெட்டுகள் கிரேக்க இலத்தீன் மொழி இலக்கியங்கள் போலும் இந்திய நாட்டைச் சேராதனவாகிய வரலாற்றுச் சான்றுகள், தனக்கு மேற்கே உள்ள நாடுகளோடு இந்தியா கொண்டிருந்த வாணிபத் தொடர்பினை மட்டுமே குறிப்பிடுகின்றன. செங்கடற் செலவு என்ற பெரிபுலுசு நூலின் தம்முடைய பதிப்பில், திருவாளர் இசுகாப்பு அவர்களாலும், “உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிகம்” என்ற தம் நூலில், திருவாளர் இலார்மிங்குடன் அவர்களாலும், இந்த வரலாற்றுச் சான்றுகள் முற்றவும் ஆராயப்பட்டு, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அந்நூல்களில் கூறப்பட்டிருக்கும் எழுத்து வடிவிலான நல்ல ஆவண அடிப்படையிலான செய்திகளை, இந்தியாவின் சார்பில் கிடைக்கக்கூடிய சிறு செய்திகளோடும் ஒப்புக்காட்டி நூற்றாண்டு நூற்றாண்டு வாரியாக வரிசைப்படுத்தியுள்ளேன்.


ஆனால், இந்நூலுக்கு உறுதிவாய்ந்த சான்றுக் களஞ்சியமாக நான் மேற்கொண்டது, கி.பி. 600க்கு முந்திய காலத்துத் தமிழ் இலக்கியமே ஆகும். பெரும்பாலான என் ஆராய்ச்சி முடிவிற்கு அடிப்படை ஆதாரமாக, உண்மையில் நான் மேற்கொண்ட நனிமிகப்பழைய நூல், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும், அந்நூல், அது எழுதப்படுவதற்கு முந்தித் தோன்றிய இலக்கியங்களுக்கான இலக்கண மரபுகளை நேரிதாக எடுத்து விளக்கவே எண்ணியுள்ளது, அவ்விலக்கணை மரபுகளை அந்நூல் எழுந்த காலத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களின் உண்மையான பழக்க வழக்கங்களாகவே நான் மதிக்கின்றேன். பண்டைத் தமிழரின் எண்ணித் தொலையா இலக்கியப் படைப்புகளின் ஒரு சிறு பகுதியாய் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற தலைப்புகளில் தொகை நூற்களில் தொகுக்கப் பெற்றிருக்கும், வேறு வேறுபட்ட நூற்றாண்டுகளில் எழுதப்பட்டனவாய் அப்பாக்கள் பலவும் தரும், வரலாற்றுச் சான்றுகளே தெளிவான, உறுதி வாய்ந்த நேரிடைக் கூற்றுகளாகும், இச்செய்யுள்கள் இரு பெரும் அறிஞர் பெருமக்களால் இதற்கு முன்பே வரலாற்று ஆய்வுக்கும் ஓர் அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன.
சொல்லேருழவு செய்யப்படாமல் வெற்றுக்கரம்பாகவே இருந்து வந்த, தமிழிலக்கியத்திறன் ஆய்வு என்ற மண்ணில், திருவாளர் வி.கனகசபை அவர்கள் முதல் உழவு செய்து, பண்டைய தமிழரசர்களின் வரலாறு பற்றிய ஆய்வினை முதன்மையாகவும், அக்கால மக்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வினை இடைப்பிறவரலாகவும் மேற்கொள்ளும், “1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்” என்ற தம்முடைய நூலைக் கொணர்ந்துள்ளார், முதுபெரும் தமிழ் அறிஞராக அவர் இருந்தும், பழந்தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதி அவர் காலத்தில் அச்சிடப்படாமையால் அத்துறையில், முழுமையாக வெற்றி காண இயலாமையால் அவர் வருந்தினார், அதனால், நம்புதற்கியலா வரலாற்றுக் கட்டுக்கதைகள் சில இடம் பெற்றுவிடத்தக்க, பல தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்க நேர்ந்துவிட்டது.

(தொடரும்)

தமிழர் பண்பாடு

புலவர் கா.கோவிந்தன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue