ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

kavimani_thesikavinayakam01
                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்
     உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்
     வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.
                கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்
     கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை;
நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச
     நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?
                   கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி
     கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு,
பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்
     பல்லவி பாடிப் பயன் எதுவோ?
                   வேதன் முகத்தில் உதித்தவரே – இங்கு
     மேலா யெழுந்த குலத்தினராம
பாத மதில்வந்த பாவியரே – என்றும்
     பாரில் இழிந்த அடிமைகளாம்!
                   வாயில் விடம்உண்டு பாம்பினுக்கு – கொட்டும்
     வாலில் விடம் உண்டு தேளினுக்கு
தாயிற் சிறந்த பிரமனக்கும் – இரு
     தாளில் விடம் உண்டோ? சாற்றுவீரே!
                  உச்சி மரத்திற் சுவைக்கனியும் – தூரில்
     ஓடிப் பரந்தெழும் வேரதனில்
நச்சுக் கனியும் பழுத்த பலாமரம்
     நானிலத் தெங்குமே கண்டதுண்டோ?
                    சாதி இரண்டலால் வேறுளதோ? – ஒளவைத்
     தாயின் உரையும் மறந்தீரோ!
ஆதி இறைவன் வகுத்ததுவோ? – மக்கள்
     ஆக்கி யகற்பனை தான் இதுவோ?
                   நாயனார் வந்த திருக்குலத்தை – உயர்
     நந்தனார் வந்த பெருங் குலத்தைத்
தீய குலம்எனத் தள்ளுவரேல் – அது
     தெய்வம் பொறுக்கும் செயலமோ?
                    வேதியராலே மழைவருமேல் – வயல்
     வேலை செய்யாது விளைந்திடுமோ
வாதமெலாம்கட்டி வைத்திடுவோம் – ஒத்து
     வாழ்வதை மேற்கொண்டு டுழைத்திடுவோம்.
                      வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? – கூரை
     வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் – இந்த
     நாடகம் ஆடல் நகைப்பலவோ?
                   மானமே வாழ்வின் உயிர்நிலையாம் – அதை
     மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்;
ஈனச் சாதியெனும் பேச்சினைப்போல் – நெஞ்சை
     ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ?
                மன்னுயிர்க் காக முயல்பவரே – இந்த
     மானிலத் தோங்கும் குலத்தினராம்;
தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்
     தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா!
 - கவிமணி தேசிகவிநாயகம்(பிள்ளை)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue