திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை
இலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment (அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார், உடைய(து) உடையரோ மற்று? ஊக்கம் உடையாரே, ‘உடையார்’; மற்றையார், உடையார் ஆகார். உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை, நில்லாது; நீங்கி விடும். ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்; பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும். ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார், ஊக்கம், ஒருவந்தம் கைத்(து)உடை யார். வளநலங்களை இழப்பினும், ஊக்கத்தார், “இழந்தோம்” என்று கலங்கார். ஆக்கம், அதர்வினாய்ச் செல்லும், அசை(வு)இலா ஊக்கம், உடையான் உழை. வளநலங்கள், வழிகேட்டுத், தளராத ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும். வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம்; மந்தர்தம், உள்ளத்(து) அனைய(து), உயர்வு.